Sunday, October 04, 2009

காமன்மேனின் திரைப்படத் தீவிரவாதம்


உன்னைப்போல் ஒருவன் என்ற தமிழ் திரைப்படத்தில் முஸ்லிம்களைக் குறித்து நச்சுக் கருத்து விதைக்கப்பட்டிருக்கிறது.தீவிரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதிலும், தீவிரவாதிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.ஆனால், யாரை யார் தீவிரவாதி என்று சொல்வது என்பதற்கு விவஸ்தை வேண்டாமா? என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பொதுமனிதன் (காமன்மேன்),சட்டத்தை கையிலெடுக்கும் செயலை நியாயப்படுத்தும் இப்படத்தில் தீவிரவாதிகளில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்-அவர்களால் பாதிக்கப்படும் அனைவரும் இந்து காமன்மேன் என்ற நச்சுக்கருத்துடன் வெளியாகியுள்ளது. இப்படத்தை அநியாயத்துக்கு விமர்சனம் எழுதி, தேவையற்ற பில்டப் கொடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக்கி விட்டார்கள்!

கமல் விடுவிக்கக்கோரும் நால்வரும் தீவிரவாதிகளாம்! அவர்களில் மூவர் காஃபீர்களைக் கொல்வதற்காக நேர்ந்து விடப்பட்ட முஸ்லிம் தீவிரவாதிகள். ஒரேயொருவர் அப்பாவி தீவிரவாதி! ஆம்! தீவிரவாதிகளென்று தெரியாமல் தெரியாத்தனமாக RDX சப்ளை செய்ததால் அப்பாவி தீவிரவாதி!

சினிமாக்களில் தீவிரவாதிகளைத் தட்டிக்கேட்பவர்கள் எல்லோருமே ஓர் அம்பியாகவோ அல்லது முஸ்லிமல்லாத காமன் மேன்களாக இருப்பது நெருடுகிறது. ஒருசமயம் முஸ்லிம்களில் காமன் மேன் (COMMON MAN) இருக்கக்கூடாது என்று எங்காவது சட்டம் உள்ளதோ என்னவோ?!


பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது தைரியமாகக் கண்டித்தும், இந்திய தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மூடிமறைக்கப்பட்ட மருதநாயகம் என்ற யூசுப்கான் குறித்து படமெடுக்கப்போவதாக பிலிம்காட்டிய கமல், இடையில் நாத்திகராகி, ரங்கராஜ நம்பியாக தசாதவதாரமெடுத்து ஐம்பதாண்டுகள் திரையுலகில் கொட்டைபோட்டு சேரவேண்டிய இடத்திற்கு சரியாகச் வந்துள்ளார் எனுமளவுக்கு "உன்னைப்போல் ஒருவனில் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான காவிவசனங்களை மானாவரியாக தூவியுள்ளார்.

தீவிரவாதிகளென்றால் பாகிஸ்தானிலிருந்து வந்த ஏதாவது ஒரு 'கான்' ஆக இருக்க வேண்டும் என்ற தமிழ் சினிமா மரபைமீறி, இதில் சொல்லப்படும் தீவிரவாதிகளெல்லாம் இந்திய முஸ்லிம்கள். படம் முக்கால்வாசி எடுத்த பிறகே காமன்மேனின் கோபத்திற்கான காரணம் சொல்லப் படவில்லை என்று உறுத்தியதோ என்னவோ பெஸ்ட் பேக்கரி படுகொலை, கற்பினிப் பெண்ணைக் கருவறுத்தது என குஜராத் பயங்கரவாதத்தையும் சேர்த்து தன்னை நடுநிலையாளராக நடிக்க முயற்சித்துள்ளார் என்றாலும் பரவலான நச்சு வசனங்களால் சாயம் வெளுத்துவிட்டது!

காமன்மேனுடன் போனில் கெஞ்சும் போலீஸ் கமிஷனர், நம்நாட்டிலுள்ள எத்தனையோ தீவிரவாதிகளை எப்படி தண்டிப்பாய்? என்று கேட்கும்போது சீட்டுக் குலுக்கிப்போட்டதில் தற்போதைக்கு இந்த நால்வரின் பெயர்களே வந்தன என்று சொல்கிறார். அத்வானி, நரேந்திரமோடி, பால்தாக்கரே, பிரவீன் தொக்காடியா முதல் பிரஞ்யாசிங் வரை நீளும் பட்டியலில் சீட்டுக்குலுக்கிப் போடாமலேயே தேர்வு செய்திருக்கலாமே என்றும் கேட்கத் தோன்றுகிறது.

குஜராத்தில் கருவருத்துக் கொல்லப்பபட்ட நான்கு மாதக் கற்பினியைக் காப்பதற்கு நாட்டில் எத்தனையோ கிருஷ்ணன்கள் இருந்தும் ஒரேயொரு கிருஷ்ணன்கூட முன்வரவில்லையே என்று நேர்மையாக ஆதங்கப்படும் காமன்மேன் கமல், தீவிரவாதிகளை முஸ்லிம்களாகவே காட்டியிருப்பது யாருடைய நிர்ப்பந்தமோ தெரியவில்லை!

சூத்திரன் கொலை செய்தால் கொன்றவனுக்கு மரணதண்டனை! பார்ப்பனன் கொலைசெய்தால் குடுமிக்கு மட்டுமே மரணதண்டனை என்று ஹேராமில் காட்டிய கமலுக்கு கீழ்கண்ட குர்ஆன் வசனம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை!

"..................உயிருக்கு உயிர்,கண்ணுக்குக் கண்,மூக்குக்கு மூக்கு,காதுக்கு காது, பல்லுக்குப் பல்; காயங்களுக்குச் (சமமான) காயங்களாகவும் நிச்சயமாக பழி வாங்கப்படும் என்று விதித்திருந்தோம்............................................."(குர்ஆன் 005:045)

Labels: , ,

Wednesday, April 22, 2009

தஜ்ஜாலிடமிருந்து வந்த பின்னூட்டம்!?!

இதயத்தில் (மட்டும்) நிரந்தர இடம் என்ற பதிவில் தஜ்ஜால் என்ற பெயரில் வந்திருந்த பின்னூட்டத்திற்கான பதில்! கேள்விகள் சுவாரஸ்யமாக இருப்பதால் தனிப்பதிவாக இங்கிடுகிறேன்.

இறைவன் சர்வசக்திபடைந்தவன் என்றால் அவனால் தூக்கமுடியாத ஓர் கல்லைப் படைக்க முடியுமா? என்ற கேள்வியைப் போன்ற கேள்விகள்! அறிந்து கொள்ளும் ஆவலில் கேட்கப்பட்டிருப்பதால் அவை புறந்தள்ளப் படக்கூடிய கேள்விகளல்ல!! விரிவான அக்கேள்விகளிலிருந்து அடியேன் கிரகித்தவை யாதெனில்,

மனிதப் படைப்பைப் பற்றிய இறைவனின் முடிவு, மலக்குகளின் கணிப்பு அல்லது இப்லீஸின் மோசடி என்பவைகளின் முலம் செய்திகள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றனவாம்!.

//குர்ஆன் வசனம் 2:30 இன்படி மனிதனைப் படைக்கப் போவதாக இறைவன், மலக்குகளிடம் தன்முடிவை தெரிவிக்க வேண்டிய காரணம் என்ன? //

நபிகளார் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவில் தங்கியிருந்தபோது அருளப்பட்ட சூரத்துல் பகராவிலில் இவ்வசனம் உள்ளது. இஸ்லாத்தின் மிக முக்கிய வாழ்வியல் தத்துவங்களும் இதே அத்தியாயத்தில்தான் உள்ளன.

அடைக்கலம் கொடுத்த மதினாவாசிகளில் பெரும்பாலோர் யூதர் மற்றும் கிறிஸ்தவர்களாக இருந்ததால் அவர்களின் வேதங்களில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் குறிப்பிட்டு அல்லது மெய்ப்பித்து உண்மை மார்க்கத்தைச் சொல்ல வேண்டியிருந்தது. அதன்படி மலக்குகள்-அல்லாஹ் இடையேயான உரையாடலைக் குறிப்பிட்டபோது மதினாவாசிகள் மறுப்புத் தெரிவிக்காமல் கேட்டதற்குக் காரணம் அவை அவர்களின் வேதத்திலும் சொல்லப்பட்டிருந்தவை என்பதேயாகும்! ஆக, ஓரிறை நம்பிக்கையாளர்கள் இடையே இவ்விசயங்களில் மாற்றுக்கருத்தோ ஐயமோ எழவில்லை.

****

இரத்தம் சிந்தி குழப்பம் விளைவிக்கும் மனிதர்களைக் குறித்து அவற்றை முன்னெப்போதும் அறிந்திராத மலக்குகளால் எப்படிக் கணிக்க முடிந்தது?இதேபோல் ஏற்கனவே என்னேரமும் துதித்துக் கொண்டிருக்க மலக்குகள் இருக்கும்போது எதற்கு தன்னைத் தொழுவதற்காக மனிதர்களைப் படைக்க வேண்டும் என்றும் கேட்கலாம்!



எவ்விதத்திலும் ஒப்புமையற்றவனாகிய இறைவன்,தன்னைவிடத் தகுதியில் குறைந்த படைப்பினத்தைப் படைத்து அவை தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது வல்ல இறைவனுக்குத் தகுதியுடையாதா? மலக்குகளைப் போன்றே சதாதுதிப்பவர்களாக எல்லா மனிதர்களையும் படைத்திருக்கலாமே! இதனால் இறைவனுக்குக் கட்டுப்படாதவர்கள் நரகம் செல்வது தவிர்க்கப்பட்டு இருக்குமே என்றும்கூட பகுத்தறிவுத்தனமாக நிறையக் கேட்கலாம். கேள்வி மட்டும் கேட்பதல்லவே பகுத்தறிவு!

திருக்குர்ஆன் வசனம் 2:30லேயே இக்கேள்விகான பதிலும் இருக்கிறது! "நீங்கள் அறியாதவற்றை எல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்". மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பு இறைவன் உரையாடிய படைப்பினமாக மலக்குகள் இருந்திருக்கிறார்கள். அவர்களுடன் எந்தமொழியில் இறைவன் உரையாடினான், எங்கு உரையாடினான்? ஏன் உரையாடினான் என்பவைகள் குறித்து யாராலும் விளக்க முடியாது.

ஏனென்றால் அவ்வாறு விளக்குபரும் அதை அறிந்திருந்தால் மட்டுமே விளக்க முடியும்!

//குழப்பமும், இரத்தங்களை ஓட்டச் செய்யவும் மனிதர்கள் (பன்மை) தேவை. மேலும் மனிதனின் உடலமைப்பு, அவனின் திறமை,குணம், செயல்பாடுகள் மற்ற எல்லா விபரங்களும் இறைவனைத் தவிர யாருக்கும் தெரியாது. இறைவன் மட்டுமே அறிந்த படைப்பின் ரகசியம் மலக்குகளுக்கு தெரிந்தது எப்படி?//

மலக்குகளே இதற்கும் பதிலைச் சொல்லியதாக அதே அத்தியாயத்தில் 2:32 உள்ளது. "....(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை......"

ஆக,மனிதர்கள் குறித்தக் கேள்வியில் மலக்குகளின் கணிப்புகள் சரியல்ல என்பதாலும் அவர்களே "எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப் பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை" என்று ஒப்புக் கொண்டு விட்டதாலும் அவர்கள் பரமரகசியம் எதையும் அறிந்திருக்கவில்லை!

//மலக்குளின் கூற்று மிக மிகச் சரியானது.மலக்குளின் கணிப்பு சிறிதளவும் தவறவில்லை.மனிதனைப்போல சுயமாகசெயல்பட முடியாத மலக்குகளால் எப்படி மனிதனைப்பற்றி மிகத் துள்ளியமாக கணிக்க முடிந்தது?//

மிகத்துல்லியமாக அவர்கள் எங்கே கணித்தார்கள்? மனிதர்கள் எல்லோரும் இரத்தம் சிந்துவார்கள் என்றல்லவா தவறாகக் கணித்திருந்தார்கள்!! காந்தி, தெரஸா போன்று எத்தனையோ ரத்தம் சிந்தாத மனிதர்களும் பிறப்பார்கள் என்பதை மலக்குகள் கணிக்கவில்லை என்பதால் மலக்குகளின் கணிப்பு துல்லியமற்றது!

//மனிதர்களை பூமியில் படைப்பதும், மனிதனின் வீழ்சிக்குக் காரணமும் இறைவன் நாட்டமே என்பதை மேற்கண்ட வசனம் உறுதி செய்கிறது. பிறகு ஏன் ஆதாம் தண்டிக்கப்பட வேண்டும்? //

அக்கிரமக்காரன் தண்டிக்கப்படத்தானே வேண்டும்! அதேஅத்தியாயம் 2::35 ல் "நீரும் உம்மனைவியும் அச்சுவனத்தில் குடியிருங்கள்; மேலும், நீங்கள் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாகப் புசியுங்கள். ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்" என்று சொன்னபிறகும் கட்டளையைமீறி அக்கிரமம் செய்ததால் தண்டிக்கப்பட்டார்!

ஒருசமயம் அவர்கள் இறைக்கட்டளைக்குக் கட்டுப்பட்டிருந்தார்களென்றால் அவர்களின் கோடாணுகோடி சந்ததியினரும் சுவர்க்கத்திலேயே பிறந்து, வளர்ந்திருப்போம்! கோடாணுகோடி பேரின் சுகபோக வாழ்க்கைக்கு வேட்டு வைத்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது நியாயம்தானே?!
//இன்று மனிதனின் இழிவான வாழ்க்கைக்கு யார் காரணம்? இப்லீஸின் மோசடியா? அல்லது இறைவனின் விதியா?/

இறைவனின் விதிக்குக் கட்டுப்படாமல் இப்லீசின் சதிவலைக்கு உடன்பட்ட மனிதனே காரணம்! உ.ம். ஆதாம்!!! (ஆதம் அலைஹி...)

****************

மற்றக் கேள்விகளையும் முழுமையாக வைத்தபின்னர் பதில் கொடுக்க முயற்சிக்கிறேன்!

"தேடுதலின் பொழுது கிடைத்தவைகள் முழுவதும் என் சுயஅறிவில் நான் கண்டவைகள் எனவே இதனால் ஏற்படும் விளைவுகள் நன்மை/தீமைகள் என்னை மட்டுமே சேர வேண்டும்" எல்லாம் அவன் செயல்!

Labels: , ,

Sunday, March 29, 2009

இதயத்தில் நிரந்த(?) இடம்!!!


சென்ற மக்களவைத் தேர்தலில் நாற்பது தொகுதிகளையும் வென்ற மயக்கம் கலைஞருக்கு இன்னும் தெளியவில்லை.இல்லாத 3.5% இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியதற்காக கலைஞருக்கு நன்றி தெரிவித்த தமுமுகவை கலைஞர் நம்பவைத்து நன்றாகக் கழுத்தறுத்து உள்ளார்.

மக்களவைத் தொகுதிக்கான கூட்டணி குறித்தப் பேச்சுவார்த்தையில் மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் வெளியூரிலும் வெளிநாட்டிலும் இருந்த காரணத்தாலும் அவர்களின் மொபைல் போன் நம்பர்கள் கலைஞருக்குக் கிடைக்காத காரணத்தாலும் மமக கேட்டிருந்த மக்களவைத் தொகுதிகள் அவர்களுக்காக ஒதுக்கப்படவில்லை!

மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு அதிமுக கூட்டணியினர் திமுக கூட்டணியைவிடக் கூடுதல் இடங்களில் வென்று, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிமுகவின் தயவு தேவைப்படும் பட்சத்தில் மாநிலத்தில் திமுகவை கவிழ்த்துவிட ஜெயலலிதா காய் நகர்த்தக் கூடும். அதிமுக கூட்டணிக்குக் கணிசமான இடங்கள் கிடைக்காவிட்டாலும் தேர்தல் முடிந்த கையோடு மைனாரிட்டி திமுக அரசிற்கு பாமக வழங்கிவரும் ஆதரவை விலக்கிக் கொண்டாலும் கலைஞர் ஆட்சி கவிழும் என்பது நிச்சயம்.

கலைஞர் ஆட்சி நீடிக்க வேண்டுமென்றால் மத்தியில் பெரும்பான்மையோடு மீண்டும் காங்கிரஸ் ஆட்சி (அதிமுக தயவின்றி) உண்டாக வேண்டும். இதுவரை ஈழத்தமிழருக்காக ஆட்சியைத் துறந்திருப்பதாக உடன்பிறப்புக்களுக்குக் கடிதம் எழுதிவரும் கலைஞர், இம்முறை அதையும் சொல்லியழ முடியாத இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறார்!

மனித நேயமக்கள் கட்சிக்கு இதுவே முதல் அரசியல் அனுபவம் என்பதால் கலைஞரின் ராஜ தந்திரம் இவர்களிடம் நன்றாகவே வேலை செய்துள்ளது. மமகவுக்கு அதிகபட்சம் ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடியும் என்று ஒற்றைக்காலில் நின்று, நேற்றிரவுவரை முடிவு எட்டப்படாததால் வழக்கத்திற்கு மாற்றம் செய்யாமல் இதயத்தில் இடம் கொடுத்துள்ளார்.



பேராசிரியர் காதர் முகைதீன் முஸ்லிம் லீக் சார்பில் வைத்த அனைத்துக் கோரிக்கைகளையும் கணிவோடு ஏற்றுக்கொண்டு அவருக்கும் இதயத்தில் இடமும் அத்துடன் வேலூர் நாடாளு மன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவும் வாய்ப்புக் கொடுத்துள்ளார்.இனி மனிதநேய மக்கள் கட்சி ஏற்கனவே முழங்கியதுபோல் தனித்துப் போட்டியிடுவார்களா? அல்லது கலைஞரின் அன்புக்கு அடிமையாகிப் பணிந்து போவார்களா? அல்லது இரண்டும் வேண்டாம் என்று தமிழ்க்குடி தாங்கியைப்போல் தரமான அரசியல் செய்வதற்கு இரட்டை இலைப் பக்கம் சாய்வார்களா?என்று விரைவில் தெரிந்துவிடும்.'வெறும் அன்பு'க்கு அடிமையாகப் போவதில்லை என்பது மமக தலைவர்களின் அண்மைப் பேச்சுகளிலிருந்து தெளிவாகி விட்டது.

எனவே, புதிதாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் முன் இருக்கும் தெரிவுகள்:

1) அதிமுகவிடம் 2-3 தொகுதிகளைக் கேட்டுப்பெறுவது.

2) விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது.

3) முஸ்லிம்களுக்கு வெற்றிவாய்ப்புள்ளத் தொகுதிகளில் மட்டும் சுயமரியாதையுடன் தனித்துப் போட்டியிடுவது.

திமுக-காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் செய்யத் தயாராக உள்ள ஜெயலலிதா, மமகவுக்கு 2-3 சீட்டு வழங்கி கலைஞருக்கு செக் வைக்கலாம்.(இந்நிலையில் தமுமுக வசமுள்ள வக்ப் வாரியப்பதவி பறிபோகும் பட்சத்தில் அதற்கு எதிர்வினையாகத் திருச்சி கலைஞர் அறிவாலயம் கட்ட ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பிரச்சினையை அதிமுக ஆதரவுடன் மமக கிளறக்கூடும் என்பதால் அனேகமாக அதில் கலைஞர் கைவைக்க மாட்டார்).

தேமுதிகவை பொருத்தமட்டில் வட/தென்மாவட்டங்களில் மட்டுமே அதற்கு அதிகச் செல்வாக்கு இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பிற மாவட்டங்களில் தேமுதிகவுடன் மமக கூட்டணி வைத்தால், முஸ்லிம் பெரும்பான்மையுள்ள தஞ்சை, நாகை, ராமநாதபுரம், வட சென்னை பகுதிகளில் திமுக வாக்குவங்கியைத் தேமுதிக ஆதரவுடன் பிரித்தெடுத்து முஸ்லிம்களின் பலத்தை உணர்த்தலாம்.வெற்றி பெறமுடியாவிட்டாலும் நிச்சயம் திமுகவின் தோல்விக்குக் காரணமாக இருந்தால் இதயத்தில் நிரந்தர இடம் ஒதுக்குவது குறித்து அடுத்தடுத்தத் தேர்தல்களில் கலைஞரை இன்னும் கொஞ்சம் யோசிக்க வைக்கலாம்.

மமக ஒத்தக்கருத்துடைய சிறுகட்சிகளுடன் கூட்டணி வைத்துத் தனித்துப் போட்டியிட்டாலும் திமுக/அதிமுக கூட்டணியின் வெற்றி/தோல்விக்குக் காரணமாக ஆகிவிடுவர்.எனவே, எதிர் காலத்தில் தமிழக திராவிடக் கட்சிகள் இனிவரும் தேர்தல்களில் கணிசமான இடங்களை முஸ்லிம்கள் கேட்காமலேயே ஒதுக்கக் கூடும்!

கூடுதல் விளக்கங்களுக்கு "அரசியல் கூட்டணியும் முஸ்லிம்களும்" குறித்து சத்தியமார்க்கம்.காம் தளத்தில் 16.3.2009இல் எனது மற்றுமொரு கட்டுரை வெளியாகியுள்ளது : http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=1184&Itemid=394

(சற்றுமுன்வரை மமக,அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசிவருவதாகச் செய்திகள் வந்துள்ளன)

Labels:

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker