Sunday, May 25, 2008

உள்ளூர் கோயபல்ஸ்கள்!

முஸ்லிம்: ஐயா உங்க பேரென்ன?

மலர் மன்னன்!

முஸ்லிம்: நீங்க எந்த ஊரு?

கும்பகோணம்!

முஸ்லிம்: கும்பகோணத்துல எந்த இடம்?

மேல அக்ரஹாரம்!

முஸ்லிம்: உங்களை நான் காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றுதான் அழைப்பேன்!

நான்தான் கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன்னு தெளிவாச் சொல்லிட்டேனே! அதனால அப்படியே அழையுங்கள்!

முஸ்லிம்: காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு உங்களை அழைப்பதை யாரும் ஆட்சேபிக்கவில்லையே! தவிர உங்கள் கண்ணில் வெள்ளை கருப்பு என்று இரு 'கலர்'கள் இருக்கிறதுதானே? அதை 'இல்லை' என்று உங்களால் மறுக்க முடியுமா? அதனால இனி நீங்க காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்தான்!

மன்னிக்கவும்! என்னைப் பிறர் எப்படி அழைப்பது என்று முடிவு எடுப்பதற்கு பிறரின் ஆட்சேபனையோ ஒப்புதலோ தேவையில்லை. நான் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று விரும்புகிறேனோ அப்படித்தான் அழைக்க வேண்டும்!

முஸ்லிம்: ஐயா! காஞ்சிபுரத்திலும் அக்ரஹாரம் உண்டு; கும்பகோணத்திலும் அக்ரஹாரம் உண்டு! உங்களைப் பார்த்து காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன்னு சொன்னால் அதை ஏன் இழிவு படுத்துவதாக எடுத்துக் கொள்கிறீர்கள்? பிரிட்டிஷார் காலத்தில் கூட கலர் கண்ணன் (அல்லது காமாலைக் கண்ணன்)என்ற பெயர் பயன்படுத்தப் பட்டிருக்கிறது தெரியுமா?

மீண்டும் சொல்கிறேன்! நான் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்ய வேண்டியவன் நான் மட்டுமே!கும்பகோணம் கீழ அக்ரஹாரத்தை காஞ்சிபுரம் மேல அக்ரஹாரம் என்று குறிப்பிடுவதால், அது நானல்ல!.

முஸ்லிம்: ஐயா! கும்பகோணம் மேலஅக்ரஹாரம் என்று சொல்வதெல்லாம் ஒரு சம்பிரதாயம்தான். எந்த அக்ரஹாரமாக இருந்தாலென்ன? ஏதோ ஒரு அக்ரஹாரம்! இதைப் பெரிதுபடுத்தாமல் விடுங்களய்யா! கும்பகோணம் அக்ரஹாரத்தை விட காஞ்சிபுரம் அக்ரஹாரம் கொஞ்சம் பிரபலமானது (POPULAR) தெரியுமா? அதனால கும்பகோணம் மேல அக்ரஹாரம் என்பதை விட காஞ்சிபுரம் கீழஅக்ரஹாரம் என்பதே சரியானது!

திரும்பத் திரும்ப அரைச்சமாவையே அரைக்கிறீங்க! என்னதான் நீங்கள் கும்பகோணத்து மேல அக்ரஹாரத்து மலர் மன்னனை காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் என்றழைத்தாலும், கலர் கண்ணன் மலர் மன்னன் ஆகமாட்டார்! உங்கள் கூற்றிற்கு என்னுடைய ஆதரவு (SUPPORT) என்றுமே இருக்காது; கும்பகோணம் மேல அக்ரஹாரம் மலர் மன்னன் என்பதே (POPULAR) பிரபலமானது;காஞ்சிபுரம் கீழ அக்ரஹாரம் கலர் கண்ணன் (NOT POPULAR).

POPULAR/SUPPORT என்பதற்குச் சரியான விளக்கத்தை கொடுத்துள்ளேன். முதலில் அதைப் படித்து விட்டு வாருங்கள்! பிறகு பேசலாம்!!

****

முஹம்மதியம்/முஸ்லிம்கள் குறித்த மலர் மன்னனின் வாதங்களை வாசித்து வரும் திண்ணை வாசகர்களுக்கு மேற்கண்ட உரையாடல் எரிச்சலைத் தந்திருக்காது என்று நினைக்கிறேன். முஹம்மதியர் என்ற சொற்பிரயோகம் முஸ்லிம்களைக் முழுமையாக அடையாளப்படுத்துவது ஆகாது என்று பலரும் பலமுறைச் சொல்லியும் விடாப்பிடியாக முஸ்லிம்களை, முஹம்மதியர் என்றுதான் அழைப்பேன் என்று தனது நீண்டகால அறியாமையை நியாயப்படுத்த முனைந்துள்ளார்.(சுட்டி #1 )


முஹம்மதியர் என்பது இழிசொல்லல்ல. முஹம்மது நபியை மட்டும் முஸ்லிம்கள் நபியாகக் கருதவில்லை. நபிமார்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதியானவர் என்பதையே நம்புபவர்களே முஸ்லிம்கள்! இஸ்லாத்தை முழுமையாகப் பின்பற்றும் முஸ்லிம்ககளின் பூர்வீக அடையாளத்தைச் சிதைப்பதாக இருப்பதாலேயே, முஹம்மதியர் என்ற சொற்பிரயோகம் முஸ்லிம்களைக் முழுமையாக அடையாளப்படுத்தாது என்பதே வஹ்ஹாபி மற்றும் இப்னு பஷீரின் வாதம்!

//முகமதியம், முகமதியர் என்ற பெயர்கள் முகமதியரிடையே பிரபலமாக இல்லை என்றுதான் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர்கள் இடையே எதிர்ப்போ மறுப்போ ஆதரவின்மையோ இருப்பதாகத் தெரிவிக்க வில்லை. முகமதியர் அல்லாதோர் அவ்வாறு பயன்படுத்தலாகாது என்று முகமதியர் கருதுவதாகவும் அவர் கூறவில்லை.//

என்று தலைக்கீழாக நின்று தண்ணீர் குடிக்க முயன்றுள்ளதன் நோக்கம் விளங்கவில்லை. ஒரே கருத்தை ஆங்கிலத்தில் வெவ்வேறு சொற்களில் சொல்லலாம் என்பதும்,முஸ்லிம்கள் குறித்து நூலெழுதிய நூலாசிரியர் முஹம்மதியர் என்பது முஸ்லிம்களைக் குறிக்காது என்று தெளிவாகச் சொல்லி இருந்தும், முஹம்மதியர் என்று விளிப்பதற்கு முஸ்லிம்களிடம் எதிர்ப்போ மறுப்போ ஆதரவின்மையோ இருப்பதாகத் தெரிவிக்கவில்லை என்று மீண்டும் மீண்டும் திருகுதாளம் செய்கிறார்.

முஸ்லிம்கள் எவ்வாறு தங்கள் எதிர்ப்பை/மறுப்பை/ தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்? இப்னு பஷீரும் வஹ்ஹாபியும் முஸ்லிம்கள்தான் என்பதையும், அவர்கள் பதில் கருத்துக்களால் எதிர்ப்பதையும் மலர் மன்னன் அறிந்தும் தன்னைத் திருத்திக் கொள்ள முன்வராததன் மூலம், தனது முதிர்ச்சியின்மையை அம்பலப்படுத்திக் கொள்ள வேண்டுமா என்பதை அவரின் முடிவுக்கே விட்டுவிடுவோம்!

//பிரஸ்தாப ஆங்கிலச் சொல்லான 'பாப்புலர்' என்பதன் சரியான பொருள் "பிரபலம்' என்பதாகும். "ஆதரவு' என்று மொழியாக்கம் செய்வதானால் ஆங்கிலச் சொல் "ஸப்போர்ட்' என்பதாக இருக்க வேண்டும். முகமதியம், முகமதியர் என்ற பெயர்கள் முகமதியரிடையே பிரபலமாக இல்லை என்றுதான் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். //

POPULAR என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "Regarded with great favor, approval, or affection especially by the general public" பொதுமக்களின் அபிமானத்திற்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டு பரவலாக மதிக்கப்படுதல்" என்று அர்த்தம் கொடுக்கப்படுகிறது. Not popular among muslims என்றால் முஸ்லிம்களின் அபிமானத்தைப் பெறாத/ ஏற்கப் படாத சொற்பிரயோகம் என்றே பொருள் கொள்ளல் வேண்டும். பலராலும் ஏற்கப்படாத ஒன்று நிச்சயம் ஆதரவு (SUPPORT) இல்லாத ஒன்றே என்பதைப் புரிந்து கொள்வதில் மலர் மன்னனுக்கு என்ன சிரமமோ தெரியவில்லை!

கோயபல்ஸ் பற்றி அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம்! ஹிட்லர் காலத்தில் இருந்த விதூஷகர்களில் ஒருவன்! ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தால் மக்களிடம் பிரபலமாகி பிற்காலத்தில் அதுதான் உண்மையோ என்ற சந்தேகம் எழுந்து, பிறகு அதுவே உண்மையாகிவிடும் என்ற புரட்டுக் கருத்துருவாக்கத்தைக் கொண்டிருந்தான்!

பலருக்கும் பிரபலமல்லாத (UNPOPULAR) முஹம்மதியர் என்ற பதத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கும் மலர் மன்னன் மற்றும் ஆதரவாளர்களை (Supporters) காணும்போது, கோயபல்ஸ்கள் உள்ளூரிலும் இருக்கிறார்களோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

URL : http://athusari.blogspot.com
Email: nalladiyar@gmail.com
====================

http://www.thinnai.com/?module=displaystory&story_id=80805152&format=html

====================
திண்ணையில் எழுதியது

Labels: , ,

Thursday, April 10, 2008

வாழ்க வெறும் தீவிரவாதம்!

* குர்ஆன் வன்முறையத் தூண்டுகிறது

* சுவர்க்கத்தில் பெருமுலைக் கன்னியர்கள் கிடைப்பர் என்ற ஆசையில்தான் காஃபீர்கள்மீது முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்

* இஸ்லாம் என்றால் அமைதி மார்க்கம் என்று சொல்கிறார்கள்;ஆனால் இஸ்லாமிய நாடுகளில்தான் (பாலஸ்தீன், ஈராக், ஆப்கானிஸ்தான்....) அமைதியின்மை நிலவுகிறது.

* பாலஸ்தீன தீவிரவாதிகள் அப்பாவி இஸ்ரேலியர்கள் மீது அநியாயமாகத் தாக்குதல் நடத்துகிறார்கள்.

* காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவத்திற்கு எதிராகக் குண்டு வைக்கிறார்கள்

*

*

*

நிற்க!

இஸ்லாமியத் தீவிரவாதம், குண்டுவெடிப்பு, ஜிஹாத் ஆகியவற்றுக்கு ஊடகங்கள் தந்து கொண்டிருக்கும் உதாரணங்கள்தான் மேற்சொன்னவை. இவற்றையெல்லாம் கண்டு, கேட்டு, கேள்விப்பட்டு, இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உங்களுக்குக் கொஞ்சமேனும் வெறுப்பு ஏற்பட்டிருக்கா விட்டால் உலகஅறிவில் நீங்கள் பின்தங்கியிருக்கிறீர்கள் அல்லது நாட்டு நடப்புகளில் ஆர்வமில்லாதவர் என்று பொருள்!

பொருளாதாரம் மற்றும் ராணுவ ரீதியில் தனக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் சீனாவிற்கு ஆப்படிக்கத் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு திபெத்தியர்களின் போராட்டம் திருப்பதி லட்டு மாதிரி கிடைத்துள்ளது.


தலாய் லாமாவுக்கு ஆதரவளிப்பதன் மூலம் சீனாவின் திமிரை அடக்கி வைக்கலாம் என்று அமெரிக்கா காய் நகர்த்துகிறது. சீன எதிர்ப்பு திபெத் போராட்டங்களை அமெரிக்கா ஆதரிப்பதன் பின்னணி திபெத்தியர்களின் விரலால் சீனாவின் கண்ணைக் குத்தலாம் என்ற ஆசை! பாலஸ்தீனர்களின் போராட்டத்தையும் ஆதரித்து, இஸ்ரேலின் கண்ணையும் குத்தலாமே! ஆசை..தோசை..அப்பளம்......அமெரிக்கா! :-)))

பாலஸ்தீனத்திலும் இராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் முஸ்லிம்கள் தம் சொந்த நாட்டில் சுதந்தரத்துடன் வாழும் உரிமைகளுக்காகவும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடினால் அது இஸ்லாமியத் தீவிரவாதமாம்! அதையே மற்றவர்கள் செய்தால், வெறும் தீவிரவாதமாம்! நல்லா இருக்குதய்யா நியாயம்!

வாழ்க வெறும் தீவிரவாதம்! ஒழிக இஸ்லாமியத் தீவிரவாதம்!!

Labels: , , ,

Wednesday, March 12, 2008

பிரச்னை குர்ஆனில் இல்லை; நம்மிடம்தான் - திரு.சுஜாதா ரங்கராஜன்


பத்திரிக்கையாளர், பன்னூலாசிரியர்,கணிஞர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்ட,தமிழ்கூறும் நல்லுலகம் நன்கறிந்த சுஜாதா என்று அறியப்பட்டு சமீபத்தில் மறைந்த திரு.ரங்கராஜன் அவர்கள் எழுதிய ஓரிரு நாவல்களைப் படித்திருக்கிறேன். சுவாரஸ்யமான எழுத்துநடை, வியக்கவைக்கும் தகவல், முடிவில் பிரமிப்பு ஆகியவற்றால் தன் எழுத்துப் பணிகளில் தனக்கென தனிஇடத்தையும் தவிர்க்க முடியாத வாசகர் வட்டத்தையும் பெற்று சிறந்து விளங்கினார்.

குர்ஆனைப் படித்தவர்களெல்லாம் சிந்தனையாளர்களல்ல; ஆனால் சிந்தனையாளர்கள் குர்ஆனைப் பற்றி அறியாமலிருக்க முடியாது. ஆகவே தான் குர்ஆனின் கூப்பாடுகள் சிந்திப்பீராக/சிந்திக்க மாட்டீர்களா? என்று சிந்தனையாளர்களை நோக்கியே இருக்கின்றன. குர்ஆன்-003:058 என்ற திருக்குர்ஆன் வரிகளுக்கேற்ப சுஜாதாவும் திருக்குர்ஆனின் நறுமணத்தை நுகர்ந்தவர்களில் ஒருவர் என்ற தகவல் பலருக்குத் தெரிந்திருக்கக் கூடும்.

பொதுவாக அறிவுஜீவிகளாக இருப்பவர்கள் திறந்த மனதுடனே எதையும் அணுகுவார்கள். தமிழ்கூறும் நல்லுலகில் அறிவு ஜீவிகளில் ஒருவராக அறியப்பட்ட எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் திருக்குர்ஆன் பற்றியும் அது மக்களிடம் எடுத்துச் செல்லப்பட்டது (வஹி) குறித்து "வஹி எனும் வேத வெளிப்பாட்டைப் பற்றிய குறிப்புகளையும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது, குர்ஆன் வசனங்களும் அதன் வெளிப்பாடும் தனிமனித சாத்தியமற்றவை" என்பதை அதன் மொழியியல் முறைமையை (Linguistic Context) ஆராய்ந்தறிந்தவர்களால் எளிதில் உணர முடியும்" என்று குர்ஆன் வெளிப்பாட்டிற்கு சுஜாதாவும் நிகழ்காலச் சான்று பகர்ந்ததாக நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

சுஜாதா ரங்கராஜன் அவர்கள் தினமணி (2003) ரம்ஜான் மலருக்காக குர்ஆன் குறித்து எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன். திரு.சுஜாதாவின் நேர்மையான மற்றும் வெளிப்படையான இந்தக் கட்டுரை அவர்மீதான நன்மதிப்பைக் கூட்டுகிறது. அண்ணாரின் இழப்பால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் மன அமைதியை தரட்டுமென்று கூறி நன்றியுடன் மீள்பதிவு செய்கிறேன்.

---------

"திருக்குர்ஆனுடன் என் முதல் பரிச்சயம் என் தந்தை மூலம் ஏற்பட்டது. அவருக்கு நான் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களை பெங்களூரில் படித்துக் காட்டிக்கொண்டு இருக்கும்போது, திடீரென்று 'குர்ஆன் படிக்கலாம். அதில் என்னதான் சொல்லியிருக்காங்கன்னு பார்க்கலாம்டா' என்றார்.

நான் உடனே புத்தகக் கடைக்குப் போய், 'தி மீனிங் ஆஃப் தி க்ளோரியஸ் குர்ஆன்' என்ற ஆங்கிலப் புத்தகத்தை வாங்கி வந்தேன். சில நாள்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தள்ளிப்போட்டு, திருக்குர்ஆனை முழுவதும் படித்தோம். அதில் சொல்லியிருக்கும் கடவுள் கருத்துக்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் இருப்பதைப் போல் உணர்ந்தோம்.

'வாழ்வுக்கான நடைமுறைக் குறிப்புகளும், எவரும் ஒப்புக்கொள்ளும்படியாக இருக்கிறதே! எந்த நாட்டுக்கும், எந்தச் சமயத்துக்கும் ஆட்சேபம் இருக்க முடியாதே! இதில் வெறுப்பதற்கு என்ன இருக்கிறது!' என்று வியந்தோம்.

அதன்பின், பல்வேறு சந்தர்ப்பங்களில் ஜாஃபர்தீன் போன்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்களைப் படித்து வந்திருக்கிறேன். இஸ்லாமிய ட்ரஸ்ட் நிறுவனம் வெளியிட்டிருக்கும் 'அண்ணல் நபிகளார் வாழ்வினிலே' போன்ற புத்தகங்கள் தெளிவாக எழுதப்பட்டுள்ளன.

மலேசியப் பிரதமர் டாக்டர் மஹாதீர் முஹம்மதின் சொற்பொழிவுகளின் தொகுப்பான 'இஸ்லாமியச் சிந்தனைகள்', நவீன உலகத்தின் முற்போக்குக்கு இஸ்லாம் தடையல்ல என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. குறிப்பாக, இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டு ஆய்வு மையத்தில் அவர் ஆற்றிய உரையில், இஸ்லாம் எப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்பதைச் சொல்லியிருக்கிறார். இந்தியர்கள் அனைவரும் தவறாமல் படிக்கவேண்டும்.

எல்லா மதங்களும் நல்லதைத்தான் சொல்கின்றன. அவைகளின் ஆதார வார்த்தைகளில் பழுதில்லை. அவற்றைக் கடைப்பிடிக்கும் மனிதர்களிடம் தான் வேறுபாடுகள் வளர்ந்திருக்கின்றன.

இஸ்லாம் என்பதற்குக் கீழ்ப்படிதல்,கட்டளைகளை நிறைவேற்றுதல் என்பது பொருளாகும். முழுமுதற் கடவுளாகிய அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளை நிறைவேற்றுதல். அந்தக் கட்டளைகளை உணர நியமிக்கப்பட்ட இறைத் தூதர்தான் அண்ணல் நபிகள்.

காளிதாசன் நாக்கில் சரஸ்வதி வந்ததும், அவன் சட்டென்று கவி புனைய ஆரம்பித்தது போல, அண்ணல் குகையில் இருந்து வெளிவந்ததும் சொன்ன வசனங்கள் இறைவனின் வசனங்கள். அவற்றின் எளிமையும் நேரடியான தாக்கமும் பிரமிக்க வைக்கும்.

'சிலைகள் உதவாதவை. அவற்றைக் கைவிடுங்கள். இந்த பூமி, இந்த நிலவு, கதிரவன், தாரகைகள், வானம், பூமியில் உள்ள சக்திகள் யாவும் ஒரே இறைவனின் படைப்புகள். அந்த இறைவனே உங்களையும் படைத்தவன். அவனே உணவளிப்பவன். அவனே உயிரை வாங்கவோ, உயிரை அளிக்கவோ செய்கிறான். மற்ற அனைத்தையும் விடுவித்து, அவனையே தொழுங்கள்!'

'திடவிசும்பு எரி வளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுதுமாய் அவைதொறும்
உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்தனன்' என்று நம்மாழ்வார் கூறியதும் அந்த இறைவனையே!

தற்பெருமை, கொடுமை, கோபம், பிறரைப் போல் பாவனை செய்தல், பிறர் துன்பத்தைக் கண்டு மகிழ்தல், பொய், கெட்டவற்றைப் பேசுதல், இரட்டை வேடம் போடுதல், புறம் பேசுதல், தகாத ஆதரவு, பாரபட்சம், பொருத்தமற்ற புகழ்ச்சி, பொய் சாட்சி அளித்தல், பரிகாசம், வாக்குறுதி மீறல், சண்டை சச்சரவு, வாக்குவாதம், குறை கூறல், ஆராயாமல் செய்திகளைப் பரப்புதல், பொறாமை, கெட்ட பார்வை இவைகளைத் தீயகுணங்களாகப் பட்டியலிடுகிறார் பெருமகனார். கம்பீரம், நிதானம், எளிமை, தூய்மை, வணங்குவது, நாவடக்கம் போன்ற நல்ல குணங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கிறார்.

திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான். திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்."

சுஜாதா (தினமணி ரம்ஜான் மலர் - 2003)
நன்றி:திரு.ரவிபிரகாஷ்

Labels: ,

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker