"சிந்திக்க மாட்டீர்களா?" என மனித சிந்தனைக்கு சவால் விடும் குர்ஆனை முஹம்மது நபி (ஸல்) எடுத்துச் சென்றது சாதாரண பாமரரிடம் மட்டுமல்ல. அராபிய பிரதேசங்களையும் உள்ளடக்கிய பாலைவனப் பிரதேசங்களை ஆட்சி செய்த ‘ஹெர்குலஸ்’ போன்ற ரோம சாம்ராஜ்ய சக்கரவர்த்திகளிடமும், அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கிய யூதர்களிடமும்தான்.
சமகாலத்தவர்களாலும் சர்வ வல்லமை பெற்றிருந்தவர்களாலும் முஹம்மது நபியின் கொள்கை உறுதியையும், அதன் தாக்கத்தையும் மறுக்க முடியாதபோது, 1400 வருடங்களுக்குப் பிறகு அக்கால மனநிலையை தற்போதைய உளவியல் அளவீடுகளால் ஒப்பிடுகிறேன் என கதைப்பது, நிச்சயம் சிந்திப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது. இதை நம்ப வைக்க யோகிகள், முனிவர்கள், சித்தர்கள் என மனித வாழ்க்கையை விட்டு விலகியவர்களையும் துணைக்கழைத்துள்ளனர்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையை திருப்பி போட்ட ஒரு கொள்கையை பாமரத்தனமகாவோ அல்லது அறிவுப்பூர்வமாகவோ குறை சொல்லி தோல்வி கண்டவர்கள், வேத வெளிப்பாட்டை 'இறை ஆவேசம்' என்றும் உளவியல் ஆராய்ச்சி என்றும் யோகிகள், சித்தர்கள் மற்றும் முனிவர்களின் செயல்களையும், வஹி வந்தபோது முஹம்மது நபியின் மனநிலையும் இவ்வாறுதான் இருந்திருக்கும் என்ற கற்பனை செய்து சில மேதாவிகள் தங்கள் பகுத்தறிவின் எல்லையை காட்டியுள்ளனர்.
இதுவும் அவர்களின் குறை பார்வையைத்தான் காட்டுகிறது என்பதை நிரூபிக்கும் முன், யோகங்கள் என உடலை வளைத்தும் ஒடித்தும் வித்தைகள் செய்த யோகிகள், துறவரம் பூண்டு வாழ்க்கையின் பாதியை வீணடித்த முனிவர்கள், நிர்வான சாதுக்கள் மற்றும் தற்கால சாமியார்கள் பற்றியும், குர்ஆன் அறிமுகப் படுத்தப்பட்ட காலகட்டத்தில் இருந்த மக்களையும் பற்றிய பார்வை அவசியமகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய யோகிகள், சித்தர்கள், முனிவர்களை அறிய ஆதாரமாக இருப்பவை, சுவடிகள் கல்வெட்டுக்கள், வாய்வழி செய்திகள்தான். அவர்களுக்கிருந்த பொதுவான ஒற்றுமை துறவரம், காட்டு விலங்குகளுடனான நெருக்கம் ஆகியவற்றை சொல்லலாம்.
இவ்வாறு வெகுஜன வாழ்க்கையை விட்டு தனித்திருந்தவர்கள் மீண்டும் சமூக அங்கீகாரம் பெறுவதில் இருந்த சிக்கலை, அவர்கள் பெற்ற அல்லது கற்ற யுக்திகளின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அடைந்தனர்.
இவர்களில் யோகிகளும் முனிவர்களும் தங்கள் ஆளுமையைப் பயன்படுத்தி மதரீதியில் பிரபலமானார்கள். இயற்கையையும் வழிபட்டு வந்தவர்களை வெகு இலகுவாக தங்கள் கட்டுப்படில் கொண்டுவந்தார்கள். (சித்தர்களளும் இவர்களைப்போல மனிதர்களை விட்டு தனித்து இருந்தாலும், சில பயிற்சிகள், ஆராய்ச்சிகள் செய்து மனித குலத்திற்கு வர்மம், சித்த மருத்துவம் போன்ற நல்லவைகளையும் வழங்கியுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.)
நவீன சாமியார்கள், மற்றும் நிர்வான சாதுக்கள், மேற்சொன்னவர்களின் தற்கால அவதாரங்களாகக் கருதப்பட்டாலும், இவர்களைப் பற்றியும், இவர்கள் போதித்த நெறிமுறைகள் பற்றியோ அல்லது அவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறியது பற்றியோ விமரிசிக்க வேண்டியதில்லை.
முஹம்மது நபியின் வாழ்க்கையை ஆராய்ந்தால், மேற்சொன்ன யோகிகள் மற்றும் சித்தர்களிடமிருந்த இயல்புகளைப் பெற்றிருக்கவில்லை என்பதை அறியலாம். ஆக, சித்து வேலைகள் மற்றும் செப்படி வித்தைகள்காட்டி அன்றாடம் வயிற்றை நிரப்பி பிழைப்பு நடத்தியவர்களுடன் மனித குலமேம்பாட்டிற்கு வந்தவர்களை ஒப்பிடுவது அறிவுடைய ஒப்பீடாகாது.
முஹம்மது நபியின் இளமைப் பருவம்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இயற்பெயர் முஹம்மத். இவர்கள் இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா எனும் நகரத்தில் கி.பி. 570ம் ஆண்டு பிறந்தார்கள்.
தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையை இழந்து, சிறு வயதிலேயே தாயையும் இழந்தார்கள்.
பெற்றோரை இழந்த பின் அவர்களின் தந்தை வழி பாட்டனார் அப்துல் முத்தலிப் என்பார் தமது பொறுப்பில் அவர்களை எடுத்து வளர்த்து வந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு அவர்களின் தந்தையின் சகோதரர் அபூதாலிபுடைய பொறுப்பில் வளர்ந்து இளமைப் பருவத்தை அடைந்தார்கள்.
சிறுவராக இருந்த போது ஆடு மேய்த்திருக்கிறார்கள். எழுத படிக்கத் தெரிந்திருக்கவில்லை. ஓரளவு விபரம் தெரியவந்த பிறகு தமது பெரிய தந்தையோடு சேர்ந்து வியாபாரமும் செய்திருக்கிறார்கள். இந்த வியாபாரத்தின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வெளியூர் பயணங்களை மேற்கொண்டார்கள்.
25-வது வயதில் தம்மை விட மூத்தவரான கதீஜா என்ற விதவையை மணந்தார்கள். அவரும் அன்றைய சமுதாயத்தில் பெரிய வசதி படைத்தவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது 25ஆம் வயதிலேயே மிகவும் வசதி படைத்தவராக மாறினார்கள்.
இளமைப் பருவம் முதல் வாலிபம் வரை முஹம்மது நபியவர்களின் செயல்களும், பேச்சுக்களும் சகமக்களிடம் காணப் பட்டிருக்கவில்லை. அவர்களின் கொள்கையை குறை கூறிய எதிரிகள் கூட, முஹம்மது நபியின் மீதான நம்பிக்கையையும், ஒழுக்கத்தையும் குறை கூற முடியாதவர்களாக அவர்களின் வாழ்க்கை இருந்தது.
யார் அந்த 'பாகன் அரபிகள்' ?
இஸ்லாம் அறிமுகப்பட்டுத்தப்பட்ட முறையை கொச்சை படுத்தியவர்கள், பாகன் என்ற அரபியர்களுக்காக அனுதாபப்பட்டு, அவர்களின் கொள்கை இஸ்லாத்துடன் தோற்றதுதான் அவர்கள் செய்த வரலாற்றில் மண்ணிக்க முடியாத தவறு என்கிறார்கள். யார் அந்த பாகன் அரபிகள்?
முஹம்மது நபி பிறந்த சமூகம் 'பாகன்' என அறியப்பட்டார்கள். இவர்கள் தனித்தனி குலம் மற்றும் கோத்திரங்களாக வாழ்ந்து வந்தார்கள். சுமார் 360 வகையான குலத்தவராகவும் ஒவ்வொருவரும் தங்களுக்கென தனித்தனி தெய்வங்களையும் வணங்கி வந்தனர். அந்த கோத்திரங்களில் 'குறைஷி' எனப்பட்ட குலத்தாரே சிறந்தவர்களாக கருத்தப் பட்டார்கள். ஏனைய குலத்தார் குறைஷிகளை விட தாழ்ந்தவர்களாக கருதப்பட்டனர். முஹம்மது நபியவர்களும் அத்தகைய குறைஷி வம்சத்தில் தான் பிறந்தார்கள். ஆக, முஹம்மது நபியும் பாகர் வழி அரபியே.
பாகன் அரபிகளின் வாழ்க்கை முறை ஏனைய அரபியர்களை விட வித்தியாசமாகவும், அறியாமை நிறைந்ததாகவும் இருந்தது. குறிப்பாக பாகன் அரபிகளில் ஆண்களே சிறந்தவர்களாகவும், செல்வங்களை தருபவர்களாகவும், தங்கள் குலம் செழிக்க வந்தவர்களாகவும் கருதப்பட்டனர்.
பெண்களின் நிலை மிக மோசமாக இருந்தது. பெண்கள் இழி பிறப்பாக கருதப்பட்டனர். பெண் குழந்தை பிறந்தால் அவமானமாக கருதினர். பெண்குழந்தைகள் தங்கள் செல்வத்தை அழிக்க வந்த துர்தேவதைகளாக கருதி, பிறந்ததும் உயிருடன் புதைக்கப்பட்டனர். ஒரு ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணுடன் உடலுரவு வைத்திருப்பது கெளரவமாக கருதப்பட்டது. தந்தையின் மணைவியை (தாய் அல்ல) மகனும், மகனின் மணைவியை தந்தையும் உடலுறவு கொள்வது சர்வ சாதாரணமாக இருந்தது.
கற்பழிப்புகளும், சூதாட்டமும், விபச்சாரமும், போதை பொருட்களும் தங்கள் குலத்தின் சிறப்பை பறைசாற்றும் செயல்களாகக் கருதப் பட்டன. போர்களும், ஜென்மப் பகைகளும் இவர்களின் வீரத்தை காட்டுவதாக கருதப்பட்டன. அற்ப காரணங்களை பரம்பரை பரம்பரையாக மனதில் வைத்து பழி தீர்க்கும் பழக்கம் இருந்தது. தந்தையால் தீர்க்கப்படாத பகையை, மகன் தீர்க்க வேண்டும் என்ற பழக்கம் இருந்தது.
வலிமையானவர்கள், பலவீனர்களை அடிமைப்படுத்தி வந்தார்கள். ஏழ்மையான அரபிகள் செல்வந்தர் அரபிகளிடம் அடிமையாகவே இருந்து வந்தனர். பெரும்பாலானோர் தங்கள் பெண்குழந்தைகளை வளர்ப்பதை சுமை என எண்ணி அஞ்சி, குழந்தைப் பருவத்திலேயே கொன்று விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இவ்வாறு தப்பிப் பிழைத்த பெண்கள், ஆண் குழந்தை பெறும் வரை ஏளனமாகக் கருதப் பட்டனர். பெண் குழந்தைகளை பெற்றால், உன்னை உன் தகப்பன் அன்று கொல்லாமல் விட்டதால்தான் இன்று எனக்கும் பெண் குழந்தையை பெற்றுத் தந்துள்ளாய் என சபித்தவாறு வாழ்க்கை நடத்தினர். அதற்காக சில சமயம் தண்டிக்கவும் செய்தனர்.
இவர்களின் இத்தகைய அறியாமை வாழ்க்கை முறையையும், பெண்குழந்தை பெற்ற பாகன் அரபிகளின் மனநிலையையும் கீழ்க்கண்ட குர்ஆன் வரிகள் மூலம் அறியலாம்:
16:58 அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது - அவன் கோபமுடையவனாகிறான்.
16:59 எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் - அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்) அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?
இவர்களுக்கு இருந்த ஒரே சிறப்பம்சம் கவிதை மற்றும் இலக்கியத் திறமை. வட்டார சொற்களை அடுக்கு மொழியிலிலும், கவிதை நயமாகவும் பேசுவதில் வல்லவர்களாக இருந்தனர். திறமையான கவிஞனாக இருப்பது, அவர்களுடைய அறிவைப் பறை சாற்றும் அளவு கோலாக இருந்தது. அத்தகையவர்கள் தற்கால மருத்துவர், வழக்கறிஞரைவிட உயர்வாக கருத்தப்பட்டனர்.
ஏழு வகையான இலக்கியங்களை கஃபாவின் சுவர்களில் தொங்கவிட்டு தங்கள் இலக்கிய அறிவை பறை சாற்றினார்கள். இன்னுமொரு சிறப்பம்சம், அபரிமித மனப்பாடத்திறமை. அவர்களின் ஒவ்வொரு கவிதையும் ஆயிரக்கணக்கான வரிகளையுடைவையாக இருந்த போதிலும், ஓரிருதடவை படிப்பதன் மூலம் அல்லது ஒரே தடவையில் மணனம் செய்யும் அபரிமித ஆற்றலைப் பெற்றிருந்தார்கள்.
வேத வெளிப்பாடு:
இத்தகைய அவல நிலையைக் கண்டு மனம் வெறுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தின் நடவடிக்கைகள் சரியானவை அல்ல என்று திட்டவட்டமாக உணர்ந்தார்கள்.
எனவே தமது நாற்பதாம் வயதில் மக்காவிற்கு வெளியே உள்ள ஹிரா எனும் குகைக்குச் சென்று தனிமையில் சிந்திப்பதை வழக்கமாகக் கொள்ளலானார்கள்.
பல நாட்களுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டு குகையிலேயே தங்கி விடுவார்கள். உணவு முடிந்ததும் வீட்டுக்கு வந்து உணவு தயாரித்துக் கொண்டு மறுபடியும் குகைக்குச் சென்று விடுவார்கள்.
இவ்வாறு குகையில் இருந்த போது தான் வானத்தையும், பூமியையும் தொட்டுக் கொண்டிருக்கும் அளவுக்கு பிரம்மாண்டமான தோற்றத்தில் ஒருவர் நிற்பதைக் காண்டார்கள்.
அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'ஓதுவீராக' எனக் கூறிய போது தமக்கு ஓதத் தெரியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மீண்டும் அவர் 'ஓதுவீராக' எனக் கூற அப்போதும் தெரியாது என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர் நபிகள் நாயகத்தை இறுகக் கட்டியணைத்து 'படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக" என்று தொடங்கும் சில வார்த்தைகளைக் கூறினார். (இது 96வது அத்தியாயத்தில் முதல் ஐந்து வசனங்களாக இடம் பெற்றுள்ளது. பார்க்க அல்குர்ஆன் 96:1-5)
இப்படித் தான் நபிகள் நாயகம் இறைத் தூதராக நியமிக்கப்பட்டு முதல் செய்தியும் அருளப்பட்டது. ஆனாலும் நபிகள் நாயகம் அவர்கள் அதிர்ச்சியடைந்து அச்சம் கொண்டார்கள். தமது மனைவியிடம் வந்து இதைக் கூறினார்கள்.
இறைவன் உங்களைக் கைவிட மாட்டான். மக்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள்; ஏழைகளுக்கு வாரி வழங்குகிறீர்கள்; உறவினர்களை உபசரிக்கிறீர்கள்; எனவே அல்லாஹ் உங்களைக் கைவிட மாட்டான்" என்றெல்லாம் அவர்களின் மனைவி கதீஜா அவர்கள் ஆறுதல் படுத்தினார்கள்.
ஆயினும் தமது ஆறுதல் போதிய பயனளிக்காததைக் கண்டு தமது உறவினர் 'வரகா'விடம் நபிகள் நாயகத்தை அழைத்துச் சென்றார்கள். இவர் முந்தைய வேதங்களைக் கற்றறிந்து, கிறித்தவ மார்க்கத்தையும் தழுவியிருந்தார்.
'நீர் இறைவனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளீர்' உம்மை உமது சமுதாயத்தினர் ஊரை விட்டே வெளியேற்றும் நிலையை அடைவீர். ஏனெனில் இறைத் தூதர்கள் பிரச்சாரம் செய்யும் போது இது தான் நடந்துள்ளது என்றெல்லாம் அவர் கூறி நம்பிக்கையூட்டினார். (நூல்: புகாரி-2)
இப்படி ஆரம்பித்த இறைச் செய்தியின் வருகை சிறிது சிறிதாக சந்தர்ப்பத்துக்கு ஏற்ப 23 ஆண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. 23 ஆண்டுகளில் சிறிது சிறிதாக அருளப்பட்ட இறைச் செய்தியின் தொகுப்பே திருக்குர்ஆன்.
சாதாரண இறைவாக்கு என்பதையே நம்ப மறுப்பவர்களிடம், இறைவன் அழைப்பின் பேரில் விண்ணுலகம் சென்றும் இறைக்கட்டளையை கொண்டு வந்தேன் என்றால் நம்புவார்களா?விண்ணுலகப் பயணத்தின் அவசியம் என்ன? அந்த உளவியல் பரிச்சையில் எப்படி மக்களின் மனதை வென்றார்கள்?
இவ்வாறு அறிமுகமான ஒரு தத்துவம் எப்படி இறைவேதம் என நம்புவது? பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு சொல்லப்பட்டவை எப்படி இக்காலத்திற்கும் இனி வரும் காலங்களுக்கும் பொருந்தும் என நம்ப முடிகிறது? அவ்வாறு வெளிப்பட்ட வேதத்தை கொண்டுவந்த முஹம்மது நபி இறைத்தூதராக ஏற்றுக்கொள்ள காரணங்கள் என்ன?
இன்ஷா அல்லாஹ் பிறகு பார்ப்போம்