தட்டுங்கள் திறக்கப்படும்
அதாவது, தருமியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் அவரை நன்கு அறிந்தவர்களிடம் கேட்பதைவிட அவருக்கு எதிரானவர்களிடம் கேட்பதே சரியாக இருக்கும் என்பதுபோல்தான் இருக்கிறது.
ஒன்றைக் குறை சொல்ல வேண்டும் என்று முடிவுக்கு வந்தபின் ஏதாவது ஒரு காரணம் இருக்க வேண்டும் என்பது மேற்கத்திய நியாயம்! அதேபாணியில் திரு. சாம் ஜார்ஜ் (தருமி ) அவர்களுக்கு இஸ்லாத்தின்பால் ஈடுபாடின்மைக்கு அவர் இஸ்லாத்தைப் பற்றி ஆய்ந்த வகையில் குர்ஆனின் வெளிப்பாடு, முஹம்மது நபியின் கல்வியின்மை மற்றும் சில போர்களில் தோற்றதையும் காரணங்களாகச் சொன்னார். அவரின் அடுத்தடுத்த வாதங்களைப் பார்ப்போம்.
4) இஸ்லாத்தில் பெண்களின் நிலை
ஆயிஷா - முகமது இப்பெண்ணை மணம் முடிக்கும்போது அவரது வயது 50-க்கு மேல்; பெண்ணுக்கோ 9. (இல்லை, 15 என்ற கருத்தும் உண்டு). - தருமி
ஆயிஷாவின் வயது பற்றிய விவாதம், அவரை முஹம்மது நபிக்கு ஆறு வயதில் நிச்சயிக்கப்பட்ட போதும் ஒன்பது வயதில் திருமணம் செய்விக்கப்பட்ட போதும் விமரிசிக்கப் படத்தக்கதாக இருந்திருக்க வில்லை. ஏனென்றால் அன்றைய திருமணங்களில் இவை குற்றமாக இருந்திருக்க வில்லை. இருந்திருப்பின், ஏகத்துவத்தின்பால் அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கொள்கையாளரை சிறுமைப் படுத்த அவருடைய எதிரிகளுக்கு அதை விட அருமையான வாய்ப்பு கிட்டி இருக்காது.
ஒன்பது வயதில் ஒரு பெண் திருமணத்திற்குத் தகுதியற்றவள் என எந்த அளவுகோலை வைத்துச் சொல்கிறீர்கள்? இஸ்லாத்தின் மீதான உங்கள் வெறுப்புக்கு இந்த திருமணம்தான் காரணமா?
Zaynab bint Jahsh- ஜேனாப் என்ற இந்தப் பெண்மணி முகமதின் வளர்ப்பு மகனின் மனைவி; வளர்ப்பு மகன் விவாகரத்து செய்த பின் இப்பெண்ணை முகமது மணம் முடிக்கிறார் . - தருமி
இதில் என்ன குற்றம் கண்டீர்? ஒரு பெண்ணை கணவன் விவாக ரத்து செய்தபின் இன்னொருவர் மறுமணம் செய்யக் கூடாது என்கிறீர்களா? அல்லது வளர்ப்பு மகன் உண்மையான மகனாவான் என்கிறீர்களா ?
ஜுவேரியா - இந்தப் பெண்ணின் கதை மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாயிருந்தது. போரில் தோற்றவனின் மனைவி விரும்பாத ஒருவனின் மனைவியாவதைத் தவிர்க்க , பேரம் பேசப்பட்டு, முகமதின் மனைவியாகிறாள். எந்த நூற்றாண்டாயிருந்தால் என்ன ..பெண்கள் நிலை எங்கும் எப்போதும் ஒரே மாதிரிதான் போலும்! - தருமி
பனூ முஸ்தலிக் போரில் முஸ்லிம்கள் வென்றதும் போர்த்தலைவனும் மகளும் அடிமைகளுடன் சிறை பிடிக்கப்படுகிறார்கள். அதில் பிணையாக பிடிக்கப்பட்ட ஜுவேரியாவின் கணவர் ஸஃப்வான் போரிலேயே கொல்லப்பட்டு விட்டார். விதவையான ஜுவைரியா அன்றைய போர் வழக்கப்படி ஸாபித் இப்னு கைஸ் என்ற சக போர் வீரருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட பங்கில் சென்றார்.
பனூ முஸ்தலிக் என்ற உயர்குடியில் பிறந்ததாலும் தலைவரின் மகள் என்பதாலும் ஸாபித் இப்னு கைஸிடமிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று ஜுவைரியா வேண்டியதால் ஏழு ஊகியா கொடுத்து விடுவிக்கப்பட்டு நபிகள் திருமணம் செய்தார்கள் - அன்னை ஜுவைரியா அவர்களின் முழுச் சம்மதத்தோடு. இப்போரின் வெற்றிக்குப்பின் பனூ முஸ்தலிக் குலம் நபியுடன் திருமண உறவு வைத்துவிட்டபடியால் பிடித்து வைத்திருந்த அத்தனை பனூ முஸ்தலீக் அடிமைகளும் விடுவிக்கப்பட்டனர். அடிமையான பெண் தானாக முன்வந்து தன்னை விடுவிக்கக் கோரியதையும், அடிமைகள் விடுவிக்கப் பட்டதையும், இதன் மூலம் ஜென்மப் பகையாளிகளாக இருந்த இரு இனங்கள் ஒன்றுபட்டதையும் "பேரம்" என்கிறீர்களா?
*முஹம்மது நபி பெண் மோகம் கொண்டவராக இருந்திருப்பின் முதலிலேயே ஜுவைரியாவை தனக்குரியவராக்கிக் கொள்வதில் எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லை. ஆனால் அவ்வாறு செய்யாமல் ஸாபித் இப்னு கைஸ் என்ற சக வீரருக்கு கொடுக்கப்பட்டது மனசுக்கு கஷ்டமாக இருக்கிறதா?
*இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஆரம்பகாலப் போர்களில் கொல்லப்பட்டதால் அவர்களின் மனைவி-மக்களுக்கு ஆதரவாக பலதாரமணம் செய்தது
*வளர்ப்பு மகன் சொந்த மகனாக மாட்டான் என்ற யதார்த்த நிலையை மக்களுக்குப் புரிய வைத்துப் பழைய மூடப்பழக்கத்தை மாற்றியது
*முஹம்மது நபியின் திருமண பந்தம் மூலம் பல்லாண்டுகால இனப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
*மற்றும் யூத, கிறிஸ்தவ தலைவர்களுடன் நட்புறவை வளர்த்து
ஆகியவற்றில் இருக்கும் நியாயம் உங்களுக்குத் தெரியவில்லையா ? மேலே சொன்னவை நியாயமான காரணங்கள்தாம், எனினும் தன் தோழர்களுக்கு மணம் செய்யச் சொல்லி இருக்கலாமே? என்று பகுத்தறிவுவாதம் செய்யலாம்.
முஹம்மது நபிகளுடன் நட்புறவு கொள்ள விரும்பியவர்களில் சிலர் தங்கள் பெண்ணைக் கொடுத்து நட்புறவை பலப்படுத்த விரும்பினர். முஹம்மது நபிகளுடன் திருமண உறவு கொள்ளக் காரணம், முஹம்மது நபியின் நற்பெயர் மற்றும் குரைஷியராகிய முஹம்மது நபியுடன் சம்பந்தம் செய்வதன் மூலம் ஜென்மப் பகையாளியான இனங்கள் இஸ்லாத்தில் இணைந்தனர்.
ஆனால், முஸ்லீம் எழுத்துக்களில் அந்த முதல் பெண்ணுக்குப் பெயரே இல்லை. பெயர் தரும் அளவிற்குக்கூட பெண்ணுக்கு முக்கியம் இல்லையோ ? - தருமி
இதை தங்களின் அறியாமை என்று ஒப்புக் கொண்டு விட்டதால் மேற்கொண்டு விளக்கம் தேவை இல்லை. எனினும் விளக்கம் வேண்டுபவர்களுக்காக சில குறிப்புகள். கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கு உள்ள ஒற்றுமையான அம்சங்களில் ஆதிப் பெற்றோர் ஆதம்-ஏவாளை நம்புவதும் ஒன்று. ஆதாம்-ஏவாள் என்பதை நாங்கள் ஆதம்-ஹவ்வா என்கிறோம்.
பார்வைக்கு ஹதீஸ் எண்கள்: புகாரீ - (ரஹ்மத் ட்ரஸ்ட் தமிழாக்கம்) எண்: 3330 மற்றும் முஸ்லிம் 2673 & 2674
5) படைப்புக்கொள்கை
இஸ்லாமில் மனிதன் உறைந்த ரத்தத்திலிருந்து உண்டாக்கப் பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. அது யாருடைய ரத்தம் ? மனிதன் படைக்கப் படுவதற்கு முன் எங்கிருந்து ரத்தம் வந்தது? ஒருவேளை கடவுளின் ரத்தமாக இருக்குமோ? - தருமி
முதல் மனிதனின் படைப்பையும் அவன் சந்ததியினரின் பிறப்பையும் குழப்பிக்கொண்டுள்ளீர்கள் . முதல் மனிதன் இறைவனின் அற்புதங்களால் களி மண்ணின் மூலச்சத்திலிருந்து படைக்கப்பட்டார் (6:2, 7:12, 15:33, 32:7, 35:11, 55:14) என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மனித வளர்ச்சி நிலைகளைப் பற்றி எந்த வேத நூலும் விவரிக்காத வகையில் குர் ஆன் விவரிக்கிறது , பார்க்க: 23:12,13 &14).
இஸ்லாம் சொல்லும் படைப்புக் கொள்கை தவறு என்பது உங்கள் வாதமானால் , நீங்களே சொல்லுங்கள் மனிதன் எதிலிருந்து தோன்றினான் ? பகுத்தறிவு பெற்ற குரங்குகள்தான் தற்கால மனிதனின் மூதாதையர் என்றால், இன்னும் சில குரங்குகள் ஏன் பகுத்தறிவடைந்து மனிதனாகவில்லை?
6) ஹூருல்ஈன்கள்:
ஒவ்வொருவருக்கும் 'houris' எனப்படும் (perpetual virgins) 'நித்திய கன்னிகைகள்'? முகமதுக்கு இவ்வுலகத்தில் கிடைத்ததை விடவும் இரண்டு மடங்கு எண்ணிகையில் கிடைக்கும் என்பது எந்த வகையில் ஒரு கடவுள் தரும் 'பரிசாக' இருக்கும். It is not definitely in good taste. (நரகத்தில் பெண்களே அதிகமாயிருப்பார்கள் என முகமதுவே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.) ஆயினும் ஆண்களுக்குக் கிடைக்கும் இந்தப் பரிசிற்குச் சமமாக மோட்சம் செல்லும் பெண்களுக்குக் கிடைக்க என்னவெல்லாம் காத்திருக்கப் போகிறது என்பதைப் பற்றி 'நல்ல வேளை' எதுவும் சொல்லப்படவில்லை! - தருமி
நீங்கள் சொல்வது ஹூருல் ஈன் (ஹூர் = நீண்ட, ஈன் = இருகண்கள்) இவர்களைப் பற்றி சொல்லப்படும் குர்ஆன் வரிகளில் பெண் என்ற வார்த்தை மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பமே. மொழிபெயர்த்தவர்கள் ஆண்களாகவே இருந்ததும் கூடக்காரணமாக இருக்கலாம். ஹூருல் ஈன் என்பதற்கு 'நீண்ட கண்களை' உடையவர்கள் என்று பொதுவாகவே சொல்லப் பட்டுள்ளது.
44:54 இவ்வாறே (அங்கு நடைபெறும்). மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.
كَذَلِكَ وَزَوَّجْنَهُمْ بِحُورٍ عِينٍ
52:20 அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.
مُتَّكِءينَ عَلَى سُرُرٍ مَصْفُوفَةٍ وَزَوَّجْنَهُمْ بِحُورٍ عِينٍ
55:72 ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப் பட்டிருப்பர்.
حُورٌ مَقْصُورَتٌ فِي الْخِيَامِ
56:22 (அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர்.
وَحُورٌ عِينٌ
2:25 (ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக! சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு . அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும் போதெல்லாம் 'இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது" என்று கூறுவார்கள் . ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (அவர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன. இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு. மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.
وَبَشِّرْ الَّذِينَ ءامَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ انَّ لَهُمْ جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْانْهَرُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قَالُوا هَذَا الَّذِي رُزِقْنَا مِنْ قَبْلُ وَاُتُوا بِهِ مُتَشَبِهًا وَلَهُمْ فِيهَا ازْوَجٌ مُطَهَّرَةٌ وَهُمْ فِيهَا خَلِدُونَ
4:57 (அவர்களில்) எவர்கள் ஈமான் கொண்டு, நன்மையான காரியங்களைச் செய்கின்றார்களோ அவர்களை சுவனபதிகளில் புகுத்துவோம், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர். அங்கு அவர்களுக்குப் பரிசுத்தமான துணைவியர் உண்டு. அவர்களை அடர்ந்த நிழலிலும் நுழையச் செய்வோம்.
وَالَّذِينَ ءامَنُوا وَعَمِلُوا الصَّلِحَتِ سَنُدْخِلُهُمْ جَنَّتٍ تَجْرِي مِنْ تَحْتِهَاالْأَنْهَرُ خَلِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا
மேலே சொல்லப்பட்ட குர்ஆன் வசனக்களின் ஹூருல் ஈன் என்ற வார்த்தை "நீண்ட கண்களையுடைய" துணைகள் என்ற அர்த்தத்திலேயே சொல்லப் பட்டுள்ளன. மூலத்தில் ஹூர் என்ற அரபி வார்த்தை பாலினத்தைக் குறிக்கவில்லை என்பதை அறியவும்.
குர் ஆனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முஹம்மது அஸத் 'ஹூர்' என்ற பதத்தை "Spouse" என்றும், அப்துல்லாஹ் யூசுப் அலி "Companion" என்றே குறிப்பிட்டுள்ளனர். பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் உறுதியான கருத்தானது "அழகிய துணை " என்பதாகவே இருக்கிறது. இது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொருந்தும்.
மேலும், நரகம் புகும் பெண்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு விட்டு, சுவர்க்கம் புகும் பெண்களுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி சொல்லப் படிருக்கா விட்டால், உங்கள் கேள்வியில் நியாயம் இருக்கலாம்.
33:35 நிச்சயமாக முஸ்லிம்களான ' ஆண்களும், பெண்களும்' நன்னம்பிக்கை கொண்ட 'ஆண்களும், பெண்களும்' இறைவழிபாடுள்ள 'ஆண்களும், பெண்களும்' உண்மையே பேசும் 'ஆண்களும், பெண்களும் ' பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும். ( அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் 'ஆண்களும், பெண்களும்'. தர்மம் செய்யும் ' ஆண்களும், பெண்களும்', நோன்பு நோற்கும் ஆண்களும் , பெண்களும். தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக் ) காத்துக் கொள்ளும் 'ஆண்களும், பெண்களும் '. அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் 'ஆண்களும், பெண்களும்' - ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான் .
13:23 நிலையான (அந்த ) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்கள் சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு ) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள். மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள்.
43:70 நீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).
3:195 ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான் . 'உங்களில் 'ஆணோ, பெண்ணோ' எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும் ) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம். எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ , மேலும் என் பாதையில் துன்பப் பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ , மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ , அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன். இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன் " (என்று கூறுவான்). இது அல்லாஹ்விடமிருந்து ( அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும். இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு .
4:124 ஆகவே, ஆணாயினும் சரி , பெண்ணாயினும் சரி, யார் ஈமான் கொண்டவர்களாக நற்கருமங்கள் செய்கிறார்களோ , அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
என்று இருபாலருக்கும் (திருமணம் ஆகாமல் இறந்தவர் உட்பட) பொதுவாகச் சொல்லி இருக்கும் குர்ஆனின் வசனங்களை நீங்கள் வாசித்திருக்க வில்லையா?
இப்படி குர்ஆனில் ஆணுக்கும் பெண்ணும் பொதுவாகவும், சில இடங்களில் ஆண்களை முன்னிருத்தியும் சில இடங்களில் பெண்களை முன்னிருத்தியும் சொல்லப்பட்டவற்றில், ஆணுக்குச் சொன்ன இடத்தில் பெண்ணுக்கு ஏன் சொல்லவில்லை என்றும் பெண்ணுக்குச் சொன்ன இடத்தில் ஆணுக்கு ஏன் சொல்லவில்லை என்றும் கேட்பது குதர்க்கமற்றி வேறென்ன?

