Saturday, December 30, 2006

பாக்தாத் வீழ்ந்த பொழுதெல்லாம்...

பாக்தாத் வீழ்ந்த பொழுதெல்லாம் அது தன்னை வீழ்த்தியோரையே தனக்குள் உள்வாங்கிக் கொண்ட அதிசயத்தை நிகழ்த்தி உள்ளது. இன்னும் அவர்களைத் தனது கொள்கையால், இறுகப் பிணைத்துள்ளது.

அபுபக்கர் (ரலி) அவர்கள் காலமாகின்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கலீபாவாக அபூபக்கர் (ரலி) அவர்கள் மூலம் அல்லாஹ் நியமித்து, இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு பேரருள் புரிந்தான். நபிமார்களுக்குப் பின்னர் இவ்வுலகம் சீரிய நடத்தை கொண்ட பூரண நீதி செலுத்திய ஒரு தனிநபரை உமரிலேயே கண்டு கொண்டது. அவரது காலப்பிரிவில் சிரியா பிரதேசம் முழுவதும், எகிப்தின் கடைசி எல்லை வரை உள்ள பகுதி, பாரசீகத்தின் அதிகமான மாகாணங்கள் என்பன வெற்றி கொள்ளப்பட்டன.

கிஸ்ரா மன்னன் முறியடிக்கப்பட்டு, மிக கீழ்மட்டத்திற்கு தாழ்த்தப்பட்டு அவனது முடியாட்சியின் எல்லைப் பகுதிக்கு பின்வாங்கி ஓடச் செய்யப்பட்டான். சிரியா பிரதேசத்தின் கைஸர் மன்னனது அதிகாரம் பிடுங்கி எறியப்பட்டது. அவன் கொன்தாஸ்து நோபிளை நோக்கி புறமுதுகு காட்டி ஓடி விட்டான். அம்மன்னர்கள் இருவரது சொத்துக்களும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடப்பட்டன. இவைகள் அனைத்தும் அல்லாஹ் நபிமார்களுக்கு வாக்களித்ததைப் போன்றே நடந்து முடிந்தது.

உஸ்மான் (ரலி) அவர்களது காலப்பகுதியில் உலகின் தூரப் பிரதேசங்களுக்கெல்லாம் இஸ்லாமிய சாம்ராஜ்யம் பரவலாகியது. மொராக்கோவிலிருந்து சீனா வரையுள்ள பிரதேசங்கள் இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்டன. கிஸ்ரா மன்னனும், அவனது ஆட்சியும் பூண்டோடு அழிக்கப்பட்டன. மேலும் ஈராக்கின் மதாயின் பிரதேசம், குராஸான், அஹ்வாஸ் போன்ற பகுதிகளும் கைப்பற்றப்பட்டன. உலகின் மேற்குப் பிரதேசங்கள், கிழக்குப் பிரதேசங்கள் அனைத்திலிருந்தும் கலீபாவை நோக்கி வருமானங்கள் வந்து குவிந்து கொண்டிருந்தன. இது குர்ஆனை ஓதி, அதனைக் கற்று, அதனை ஒன்றிணைந்து தனது சமுதாயத்திற்காக குர்ஆனைப் பாதுகாத்ததினால் கிடைக்கப் பெற்ற அருளாகும்.

எனது சமூகத்தின் ஆதிக்கம் எனக்கு சுருக்கிக் காண்பிக்கப்பட்டது. அது புவியின் கிழக்கு, மேற்கு நாடுகளுக்கெல்லாம் சென்றடையும் என்ற அந்த சுபச்செய்தி ஒரு நூற்றாண்டு முடிவடைவதற்குள் நிகழ்ந்து முடிந்ததைக் காண்கிறோம்.

மேற்கிலிருந்து ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட படையெடுப்புக்கு இஸ்லாம் உட்பட்டமை போன்ற சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருந்த கீழைத் தேய தார்த்தாரியர்களின் ஆக்கிரமிப்புக்கும் இஸ்லாம் இலக்காக்கியது. தன்னெதிரே நிற்கின்ற எதனையும் விட்டு வைக்காது துகள் துகள்களாக ஆக்கி விடக் கூடிய சூறாவளி போன்று இஸ்லாமிய உலகை அவர்கள் திடீரெனத் தாக்கினர். முஸ்லிம்கள் சின்னாபின்னமாகி பலவீனர்களாக இருந்த காலப் பகுதியிலேயே இவர்கள் மேலோங்கினார்கள். முஸ்லிம்களிடம் தமது சிதறிய அணிகளை ஒன்றுபடுத்தும் ஒரு பலமிக்க தலைமைத்துவமோ, மக்களைத் தட்டியெழுப்பக் கூடிய ஓர் ஈமானிய உணர்வோ இருக்கவில்லை.

ஆனால் தார்த்தாரியர்கள், யாராலும் அசைக்க முடியாத பலம் பெற்ற இராணுவ சக்தியாக அன்று விளங்கினர். அவர்களது தலைமைத்துவத்திற்கு அச்சத்துடன் கூடிய மதிப்பிருந்தது. பெரும் படைகளெல்லாம் தோற்கடித்த மன்னர்கள், தலைவர்கள் பெரும் செல்வ வளம் பெற்றிருந்த ஆட்சியாளர்கள் போன்ற எவருக்கும் அவர்கள் முன்னே எதிர்த்து நிற்க தைரியம் ஏற்படவில்லை. நாடுகளெல்லாம் ஒவ்வொன்றாக அவர்கள் வசமாகின. ஆட்சியாளர்கள் புறமுதுகு காட்டி ஓடத் தொடங்கினர். அத்தோடு படிப்படியாக தலைவர்கள் அவர்கள் முன் கைகட்டி நிற்கலாயினர். ஒரு வெற்றி அடுத்ததை நோக்கி அவர்களைத் தூண்டி விட்டது. வெற்றிமேல் வெற்றி கிடைத்தது.

"தார்த்தாரியர்கள் தோற்கடிக்கப்பட்டனர் எனக் கூறப்பட்டால் அதனை நம்பி விடாதே" என்ற வார்த்தைகள் அன்று பிரபல்யமாயிருந்தன. தார்த்தாரியர் என்போர் மிகைக்க முடியாத சக்தி என்ற கருத்து காலகாலமாகச் சொல்லப்பட்டு வந்தது.

இறுதியாக இஸ்லாத்தின் பூமியான பக்தாத் மீது படையெடுத்தனர். அப்பாஸிய கிலாபத்தின் தலைமைப்பீடமாக, இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் உயர் மதிப்பிற்குரிய தளமாக இந்நகரம் விளங்கியது. பலத்த அடிகளுக்கு இலக்காகிய இவ்வாட்சி பீடம் அவர்கள் கைவசம் சிக்கிக் கொண்டது. முஸ்லிம்களின் பெயர்களைச் சுமந்த புல்லுருவிகளும் இவ்வீழ்ச்சிக்கு உடந்தையாகச் செயல்பட்டனர். ஆறுகளாக இரத்தம் பெருக்கெடுத்தோடியது.

"எமது நாகரீகத்தைத் தன்னகத்தே கொண்டிருந்த பெரும்பாலான நூல்கள் தைகிரீஸ் நதியில் வீசப்பட்டன. புத்தகங்களின் கறுப்புநிற மையினால் அந்நதி முழுவதும் கருமை நிறமாக மாறி விட்டது".

இவ்வாறு வருடங்கள் கடந்து சென்றன. அதோ! இஸ்லாம் தன்னகத்தே மறைத்து வைத்திருந்த அற்புதம் இரண்டு தடவைகளில் வெளிப்படுகிறது.

முதலாவது, வரலாற்றில் இடம் பெற்ற தீவிர யுத்தங்களில் ஒன்றில் இராணுவ ரீதியாக தார்த்தாரியர்களை இஸ்லாம் வெற்றி கொண்டது. ஐன்ஜாலூத் என்றழைக்கப்படும் இந்த யுத்தம் நேர்த்தி மிக்க மம்லூக்கிய தளபதி ஸைபுத்தீன் என்பவரது தலைமையில் எகிப்திய படையினருடன் இணைந்து நடாத்தப்பட்டது. ஹிஜ்ரி 658 ரமழான் 25 ஆம் தேதியையே இவ்வெற்றியின் நாளாக இறைவன் ஆக்கியிருந்தான். அதாவது பக்தாத் வீழ்ச்சியடைந்து இரண்டே வருடங்களில் இது நிகழ்ந்தது.

தார்த்தாரியர்களின் உள்ளங்களையும் இஸ்லாம் ஆக்கிரமித்துக் கொண்டமை இஸ்லாம் அடைந்த இன்னொரு வெற்றியாகும். இதோ! இஸ்லாத்துடன் போர் தொடுத்த இக்கொடுங்கோலர்களுடன் இஸ்லாம் யுத்தம் புரிகின்றது. படை வீரனின் உருவிய நிலையிலுள்ள வாள், நிராயுதபாணியான இஸ்லாமியக் கோட்பாட்டின் தாக்கத்திற்கு முன்னால் நிலைத்திருக்க முடியாது வீழ்ந்து விடுகிறது. வெற்றியாளர்கள் இறுதியாக வெற்றி கொள்ளப்பட்டவர்களின் மார்க்கத்தினுள்ளே நுழைந்து விடுகின்றனர்.

"தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான்" என இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாகவல்லவா இது இடம் பெற்றுள்ளது! எனவே இது இரண்டாவது வெற்றியாகும்.

நவீன காலத்தில், பிற இஸ்லாமிய நாடுகளில் காலனித்துவப் படைகளுக்கு எதிராக வீரமிக்க முஸ்லிம்களின் ஜிஹாதியப் போராட்டத்தைக் காண்கிறோம். பிரான்ஸியர்களுக்கு எதிராக அமீர் அப்துல் காதிர் அல் ஜஸாயிரிஜி அவர்கள் அல்ஜீரியாவில் போராடுகிறார்கள், ஸ்பானியர்களுடன் அமீர் அப்துல் கரீம் கிதாபி மொரோக்கோவில் யுத்தம் புரிகிறார். வீரர் உமர் முக்தார் லிபியாவில் இத்தாலியர்களுடன் போர் தொடுக்கிறார். ஆங்கிலேயர், யூதர்கள் போன்றோருடன் ஷெய்க் இஸ்ஸதீன் அல் கஸ்ஸாம் பலஸ்தீனில் மோதுகிறார். பிரான்ஸியக் காலனித்துவத்திற்கு எதிரான புரட்சி, யூத - சியோனிஸவாதிகளுக்கெதிரான பலஸ்தீன போராட்டம், ஆங்கிலேயருக்கெதிராக சுயஸ் கால்வாய்ப் போராட்டம் முதலியவற்றையெல்லாம் வரலாற்றில் கண்டு வந்துள்ளோம்.

பேர்னாட் லூயிஸ் தனது "மேற்குலகமும், மத்திய கிழக்கும்" என்ற நூலில் ஏற்றுக் கொண்டதைப் போன்று, ஏனைய மேற்கத்தேய வரலாற்று ஆசிரியர்களும் கீழ் வருகின்ற கருத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். இஸ்லாமியப் பிரதேசங்களில் இடம் பெற்றுள்ள காலனித்துவத்திற்கெதிரான விடுதலைப் போராட்டங்களை வழிநடாத்திச் சென்றவை மார்க்கம் சார்ந்த இயக்கங்களே.

இன்றைக்கு சதாமைக் கைது செய்ததன் மூலம் ஈராக்கின் பிரச்னைகளுக்கு முற்றுபுள்ளி வைத்து விடலாம் என்று அமெரிக்காவும், பிரிட்டனும் மனப் பால் குடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைக்கு ஈராக்கில் நடைபெறுகின்ற போராட்டத்திற்கும், சதாமிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.

எனவே, இந்தப் போராட்டம் இறுதி வரை தொடரும். டியூப்களில் அமெரிக்க ராணுவத்தினரின் பிணங்கள் அன்றாடம் கொண்டு செல்லப்படும் நிகழ்வுகளும் தொடரும். எதுவரையெனில், வியட்நாமில் அமெரிக்கா பாடம் படித்த வரலாற்றை, மீண்டும் அது ஞாபகப்படுத்திக் கொள்ளும் வரை தொடரும்..!

மீண்டும் பாக்தாத் தனது பழைய வரலாற்றைப் புதுப்பிக்கும். ஆம்..! 'தோல்வியுற்றவன் வெற்றியாளனுக்குப் பின்னால் கண்ணை மூடிக் கொண்டு செல்வதிலே ஆர்வமாக இருப்பான்" என்ற இப்னு கல்தூன் கூறிய வழக்கத்திற்கும் பிரபல்யத்திற்கும் நேர் முரணாக, தார்த்தாரியர்களைத் தனதாக்கிக் கொண்ட வரலாற்றைப் படைத்த பாக்தாத், இந்த அமெரிக்கர்களையும் தனாக்கிக் கொள்ளும். அது இஸ்லாத்திற்குள் அவர்களை உள்வாங்கிக் கொள்ளும். ஆம்..! அதற்கான அறிகுறிகள் அமெரிக்காவில் தென்பட ஆரம்பித்து விட்டன.

இஸ்லாத்தை அணைத்துக் கொள்ளும் மக்கள் தொகை அங்கே அன்றாடம் அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இன்ஷா அல்லாஹ்..! விரைவில் அமெரிக்காவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கின்றவர்களாக முஸ்லிம்கள் மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்பதை, நிகழ்வுகள் மெய்ப்பித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

பாக்தாத் மீண்டும் எழுச்சியுறும். அது எழும் பொழுது, உலகத்து அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அமெரிக்காவும், யூதர்களும் இருக்க மாட்டார்கள். அந்த சக்தி இஸ்லாத்தின் கைகளில் இருக்கும். இன்ஷா அல்லாஹ்..!

அந்த நாளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. நாளை நெருக்கமாக்கி வைக்க கடுந் தவம் புரிவோம்..! அஞ்ஞான இருளில் கட்டுண்டு கிடக்கும் பூமியை, படைத்தவனின் கொள்கையால் பிணைத்து வைத்திடுவோம்...!

பின்குறிப்பு: ஏ ஒன் ரியலிசம் தளத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரையின் பகுதி. தற்கால நிகழ்வுக்கு ஆறுதலாக இருப்பதால் நன்றியுடன் மறுபதிவு செய்யப்படுகிறது.

சதாம் ஹுசைன் ஒரு சர்வாதிகாரியா?

அரபுலகின் ஆண்மையுள்ள ஆட்சியாளர்களில் ஒருவரான சதாம் ஹுசைனை முஸ்லிம்களின் தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா (பக்ரீத் பண்டிகை) அன்று அமெரிக்க எடுபிடிகள் தூக்கிலிட்டுக் கொன்றுள்ளனர்.



ஈராக் அதிபர் சதாம் என்னதான் கொடுரமானவராக சித்தரிக்கப்பட்டிருந்தாலும் உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்களும் நியாயவான்களும் சதாமுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனன அநீதியானது என்றே கருதுகின்றனர். குறிப்பாக அமெரிக்க மக்கள், இதற்குக் காரணமான கயாவளி ஜார்ஜ் புஷ்ஷின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பைக் காட்டும் விதமாக சென்ற மாதம் நடந்த இடைக்கால தேர்தலில் செருப்பால் அடிப்பதற்குப் பதில் ஓட்டால் அடித்து நிரூபித்தார்கள்.

முஸ்லிம்கள் சந்தோஷமாக இருக்கும் திருநாளில் தன் எடுபிடிகள் மூலம் கொடூர சர்வாதிகார வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ள ஜார்ஜ் புஷ், சதாம் பதுங்கு குழியில் இருந்தபோதும், அமெரிக்க எடுபிடிகளின் நீதிமன்றக் காவலில் இருந்த போதும், (அமெரிக்காவின்) அடக்குமுறைக்கும் ஆணவத்திற்கும் அடிபணியாது இறைவனை மட்டுமே நம்பும் தியாகிகளின் பேறு பெற்றுள்ளார். இறைவனை மறந்து ஆட்சி செய்யும் ஆட்சியாளார்கள், இறைவனை உணர செலுத்த வேண்டியவை எப்படியெல்லாம் இருக்கும் என்பதற்கு சதாமின் சகாப்தம் ஒரு நிகழ்கால உதாரணம்.

சதாம் ஹுசைனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, "அவர் ஆட்சியில் மறுக்கப்பட்டிருந்த நீதிகளின் ஒரு பகுதியே" என்று திருவாய் மலர்ந்த உலக மகாக் கோழை ஜார்ஜ் புஷ் இன்று சதாம் தூக்கிலிடப்பட்டதற்கு கருத்து தெரிவிக்கும் போது, "சதாமை நீதியின் முன் கொண்டு வருவதன் மூலம் ஈராக்கில் நடக்கும் வன்முறைகள் முடிவுக்கு வராது; எனினும் இது நிலையான மற்றும் சுயபாதுகாப்புள்ள ஈராக்கை ஜனநாயகம் ஆள்வதற்கான பாதையின் முக்கியமான மைல்கல்" என்றார்.
Image and video hosting by TinyPic

இன்னொரு பக்கம் உலகத் தலைவர்கள் கோழைத்தனமான இத்தண்டனையைக் கண்டித்து அறிக்கை விட்டுள்ளனர். (அதற்கு மட்டும்தானே இவர்கள் இருக்கிறார்கள்).

சர்வாதிகாரி, கொடூர கொலைகாரன் என்று சொல்லப்பட்ட சதாமின் ஆட்சிக்காலத்தில் ஈராக்கியர்கள் பெற்று வந்த அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை, ஜனநாயக உலகின் காவலர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் அமெரிக்க ஆட்சியார்களால் இழந்துள்ளனர். இந்தவகையில் சதாம் ஹுசைன் புஷ்ஷ விட பலமடங்கு உயர்ந்து நிற்கிறார்.

தன்னைக் கொல்ல திட்டமிட்ட 148 சூழ்ச்சியாளர்களைக் கொன்ற சதாமுக்கு ஈராக்கின் சட்டத்தின்படி மரன தண்டனை என்றால், 600,000 க்கும் அதிகமான அப்பாவிகளைக் கொல்லக் காரணமான புஷ்ஷூக்கு என்ன தண்டனை காத்திருக்கிறது?



"நீங்கள் (ஈராக் மக்கள்) நிம்மதியாக தூங்குங்கள். நான் உங்களுக்காக தூங்காமல் இருக்கிறேன்." என்று 2003, ஜனவரி 20 அன்று சொன்ன சதாம் ஹுசைன் இன்று (டிசம்பர்-30,2006) கொடூரர்களின் சதியால் ஈராக் மக்கள் நிம்மதியாகத் தூங்காமல் தவிக்க விட்டுச் சென்றுள்ளார்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்...

Thursday, December 28, 2006

கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்! (பகுதி-2)

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகத்தில் குர்பானி கொடுப்பதற்காக ஒட்டகங்களை பலியிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.பக்ரீத் பண்டிகை ஜனவரி 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக ஆடு, மாடுகளை குர்பானி பலியாக கொடுப்பது வழக்கம். அதே போல ஒட்டகங்களும் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன.

இந் நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் 8 ஒட்டகங்களை சென்னைக்குக் கொண்டு வந்துள்ளது. வண்ணாரப்பேட்டை கிழக்கு கல்லறை சாலை பகுதியில் உள்ள மசூதியில் இந்த ஒட்டகங்கள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 92 ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படவுள்ளதாக தமுமுக தொண்டர் அணிச் செயலாளர் முகம்மது ரஃபி கூறியுள்ளார்.

ரஃபி கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாகத்தான் இங்கு ஒட்டகங்கள் குர்பானியாக கொடுக்கப்படுகின்றன. ஆந்திராவிலிருந்து ஒரு ஒட்டகம் ரூ. 30,000 என விலை கொடுத்து 8 ஒட்டகங்களை 2 லாரிகளில் கொண்டு வந்தோம்.

ஆந்திர மாநிலத்தில் ராஜஸ்தான் ஒட்டகங்கைள கொண்டு வந்து சந்தை போல நடத்துகிறார்கள். அதேபோல அரசு அனுமதியுடன் அடுத்த ஆண்டு சென்னையிலும் ஒட்டக சந்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என்றார்.

ஆனால், பாரதீய பிராணிகள் நல சங்கம் சார்பில் ஒட்டகங்களை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஒட்டகங்கள் உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

=====================================================
முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையின் போது ஆடு,மாடு, ஒட்டகங்களை குர்பானி கொடுப்பது வசதியுள்ள முஸ்லிம்களின் கடமை.உலகமெங்குமுள்ள முஸ்லிம்கள் பெருநாள் தொழுகையை தொழுதுவிட்டு தங்கள் தகுதிக்கு ஏற்ப இப்பிரானிகளை இறைவனின் பெயரால் அறுத்து தங்களுக்கும், அண்டை வீட்டார் மற்றும் ஏழைகளுக்கும் வழங்குவது வழக்கம்.

நம் நாட்டில் மாடுகளை அறுத்து பலியிடுவதை அவ்வப்போது மிருக வழிபாட்டாளார்கள் எதிர்த்து வருகின்றனர். அதற்கு 'ஜீவகாருண்யம் என்ற வெளிக்காரணமும், முஸ்லிம்களைச் சீண்டுவதற்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோமே என்ற மறைமுகக் காரணமும் இருந்து வருகிறது. மேலும் தோல்தொழிலில் முன்னனியில் இருப்பதும் முஸ்லிம் வர்த்தகர்கள் என்றால் தேசபக்தர்களுக்கு "ஜீவகாருண்யம்" வராமல் என்ன செய்யும்? வடமாநிலங்களில் உணவுக்காக மாட்டைக் கொன்ற தலித்துக்களை உயிரோடு கொல்லும் அளவுக்கு மிருகாபிமனிகளைக் கொண்டது நம் நாடு!

இந்தியாவிலிருந்து உலகம் முழுவதும் குறிப்பாக வளைகுடாவுக்கு ஏற்றுமதியாகும் இறைச்சியின் மூலம் கனிசமான அண்ணியச் செலவானி கிடைப்பதோடு, உபரியாக இருக்கும் கால்நடைகளின் பெருக்கம் கட்டுக்குள் இருக்கிறது.மேலும் தோல் சார்ந்த தொழிழ்களும் வேலை வாய்ப்புகளும் இதன் மூலம் கிடைக்கிறது என்பதை மிருகநல அமைச்சரைக் கொண்ட பா.ஜ.க வும் உணர்ந்தே இருந்தது.மீசைக்கும் ஆசை! கூழுக்கும் ஆசை!!

இன்னொருபக்கம் பிராணிகளுக்கு கருணை காட்டுகிறேன் என்று,வீதியில் திரியும் வெறி/சொறி நாய்களுக்குக் கூட கருணை காட்டும் மத்திய அமைச்சரையும் சட்டத்தையும் கொண்டது நம் பாரதத் திருநாடு! சமீபத்தில் மூன்று வயதுச் சிறுவனை வெறிநாய்கள் கடித்துக் குதறிய சம்பவத்தை நினைக்கும் போதெல்லாம் இந்த மிருகவெறியர்கள் மீது கோபம் வந்து தொலைக்கிறது.

இந்திய அரசியல் சாசணத்தின் 25 ஆவது பிரிவி வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையின் படியும், இந்திய வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம் (1972) இல் விலங்குகளை குர்பானி கொடுப்பது பற்றி எந்த தடையும் விதிக்கவில்லை என்பதும், இந்திய வனவிலங்கு வாரியம் வெளியிட்டுள்ள "பலியிடக் கூடாத விலங்குகள்" பட்டியலில் ஒட்டகம் இடம் பெறவில்லை என்பதும் கவனிக்கத்தது.

பாரதீய பிராணிகள் நல சங்கம் சார்பில் ஒட்டகங்களை பலியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், ஒட்டகங்கள் உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டுள்ளதால் அவற்றை வெட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டதாம். ஆந்திராவும் இராஜஸ்தானும் இந்தியாவில்தானே இருக்கிறது? மேலும் ஒட்டகம் அறுக்க சிறப்பு அனுமதி தேவை என்று எந்தச் சட்டத்தில் உள்ளது என்பது மதசார்பற்ற இந்தியாவின் மாண்புமிகு நீதிபதிகளுக்கே வெளிச்சம்!

சென்ற வருடமும் ஒட்டகம் அறுக்க தடை பற்றி "கோர்ட்டுக்கு வந்த ஒட்டகம்" என்ற பதிவிட்டேன். எதற்கும் அதையும் வாசித்துக் கொள்ளவும்.

Monday, December 25, 2006

இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?

இயேசுவை அவமதிக்கவா கிறிஸ்துமஸ்?
முஹம்மது நபிக்கு முந்தைய இறைத்தூதர் என்ற வகையில் இயேசுவை முஸ்லிம்கள் முஹம்மது நபிக்கு இணையாக மதிக்கிறார்கள்.இயேசுவின் உண்மையான போதனைகளைப் பின்பற்றுவதோடு,அவர் தடுத்தவற்றை இன்றளவும் பின்பற்றி இயேசுவைக் கண்ணியப்படுத்துவதில் முஸ்லிம்களே முன்னனியில் இருக்கிறார்கள்.

இயேசுவின் முக்கியமான போதனைகளில் ஒன்றான மது,விபச்சாரம் போன்ற பாவச்செயல்களை இஸ்லாம் 'ஹராம்' என்று தடுக்கிறது. கிறிஸ்துவின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் மதுவுடன் தொடங்கும் களியாட்டங்கள் பைபிள் தடுக்கும் பெரும் தீமைகளுடனேயே தொடர்ந்து தீமையிலேயே முடிகின்றன. இயேசுவின் மீது உண்மையான மரியாதை வைத்திருந்தால் அவரைப் பின்பற்றுவதாகச் சொல்பவர்கள் இதனைச் செய்வார்களா?

இயேசு மூலம் வந்த இறைபோதனைகள் அவருக்குப் பின்வந்த சீடர்களால் களங்கப்பட்டுள்ளன என்று இஸ்லாம் சொல்வதில் நியாயமிருக்கிறதா இல்லையா என்பதை பைபிளை நம்பும் சகோதரர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளாக கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர்-25இல் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இதற்கும் பைபிளிலோ அல்லது ஆரம்பகால உண்மையான கிறிஸ்தவர்களிடமோ சரியான சான்றுகள் ஏதும் இருந்திருக்கவில்லை என்ற தகவல் ஆச்சரியமளிக்கிறது !

இயேசுவின் பிறப்பு பற்றியக் குறிப்பு பைபிளில் காணப்படுகிறது. ஆனால் எங்குமே அவரின் பிறந்தநாளைக் கொண்டாடச் சொல்லவில்லை. பிறந்த நாளைக் கொண்டாடுவதை முஹம்மது நபியும் செய்தது இல்லை; ஏனெனில் அது இஸ்லாத்தில் இல்லாதது.பிறந்த நாளைக் கொண்டாடுவது இயேசுவுக்கும் முஹம்மது நபிக்கும் முந்தைய பாகன்களின் வழிமுறையாகவே இருந்துள்ளது.

இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்துமஸுடன் தொடர்புடைய கிறிஸ்துமஸ்மர அலங்கரிப்பை பைபிள் கண்டிக்கிறது!

"The customs of the people are worthless, they cut a tree out of the forest, and a craftsman shapes it with his chisel, they adore it with silver and gold, they fasten it with hammer and nails so it will not totter" (Jeremiah 10-3,4).

கிறிஸ்துஸ்துவுக்குப் பின் சுமார் நான்கு நூற்றாண்டுகள் வரை கிறிஸ்துமஸ் கொண்டாடப் பட்டிருக்கவில்லை. Oxford Guide to Ideas and Issues of the Bible (Bruce Metzger and Michael Coogan, editors, 2001) என்ற நூலில் கிறிஸ்துமஸ் பற்றியும், இயேசுவின் பிறந்த தினம் பற்றியும் கீழ்கண்டவாறு விளக்குகிறது,

Twenty-five December was by the fourth century [ A.D.] the date of the winter solstice, celebrated in antiquity as the birthday of Mithras [an ancient Persian god] and of Sol Invictus [the 'unconquered' sun god]. In the Julian calendar the solstice fell on 6 January, when the birthday of Osiris [the Egyptian god of the dead] was celebrated at Alexandria. By about 300 CE [ A.D.], 6 January was the date of the Epiphany in the East, a feast always closely related to Christmas" பார்க்க:http://www.gnmagazine.org/issues/gn43/bornchristmas.htm

டிசம்பர் 25 ஐ இயேசுவின் பிறந்த தினமாக கி.பி.354 இல் போப் லிபெரியஸால் பிரபலப்படுத்தப்பட்டு கி.பி,435இல் போப் சிக்ஸ்டஸ் III ஆல் முதல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டது. இதே நாளில்தான் ரோமர்களும் பார்சியர்களும் தங்கள் கடவுளின் தினமாகக் கொண்டாடி வந்தனர், ரோமன் கத்தோலிக்க அறிஞர் மரியோ ரைட்டி (Mario Righetti ) சொல்வதுபோல், "To facilitate the acceptance of the faith by the pagan masses, the Church of Rome found it convenient to institute the 25th of December as the feast of the birth of Christ to divert them from the pagan feast, celebrated on the same day in honor of the 'Invincible Sun' Mithras, the conqueror of darkness" (Manual of Liturgical History, 1955, Vol. 2, p. 67). பார்க்க: http://www.ucgstp.org/lit/gn/gn008/gn008f03.htm

இயேசு/ஈஸா (அலைஹி) அவர்கள் சொன்னவற்றைப் பின்பற்றாமல் அவர் தடுத்த மது, விபச்சாரம், இறைவனை மறந்த களியாட்டங்களைப் பின்பற்றுவது இயேசுவை மதிப்பவர்கள் செய்யக் கூடாத ஒன்று என்பது என் தாழ்மையான கருத்து.

மாற்றுக் கருத்திருந்தால் சகோதரர்கள் பகிர்ந்து கொள்ளலாம்!

Thursday, December 07, 2006

சபாஷ்!!!

IIM-இல் சேர்வதற்கான நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மாணவனிடம்,தேர்வாளர் "பத்து சுலபமானக் கேள்விகளைக் கேட்கவா? அல்லது ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கவா? என்றார். மாணவனுக்கு சற்று குழப்பமாக இருந்தது. சில நொடிகள் கண்களைமூடி நன்கு யோசித்து "ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேளுங்கள்!" என்றான்.

தேர்வாளர்: உன் பதிலை வைத்தே உன்னை கல்லூரியில் சேர்ப்பதும் கேர்க்காததும் முடிவு செய்யப்படும். ஆகவே, நன்கு யோசித்து தெரிவு செய்!.

மாணவன்: நம்பிக்கையாகச் சொல்கிறேன்! ஒரேயொரு கடினமான கேள்வியைக் கேட்கலாம். என்றான்.

தேர்வாளர்: What comes first, Day or Night?

மாணவன்: It's the DAY sir!

தேர்வாளர்: How?

மாணவன்: Sorry sir, you promised me that you will not ask me a SECOND difficult question!



உங்களிடமும் இது மாதிரியான சபாஷ் விசயங்கள் இருந்தால் பகிர்ந்து கொள்ளலாமே!

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker