Tuesday, August 28, 2007

சட்டத்தின் முன் அனைவரும் சமம்?

அரியவகை மான்களை வேட்டையாடிதால் இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை ஜோத்பூர் நீதிமன்றம் விதித்துள்ளது. இதை முன்னாள் மத்திய பிராணி அமைச்சர் மேனகா காந்தியும் 'மிருகாபிமான' மனிதர்களும் வரவேற்றுள்ளார்கள்!

நாகரிகச் சமூகத்தில் மனித உயிர், மற்ற உயிர்களைவிட மதிப்புள்ளதாகக் கருதப்படுகிறது! இதே சல்'மான்'கான் சில வருடங்களுக்கு முன் குடித்து விட்டு காரை வேகமாக ஓட்டி ஒரு மனிதனைக் கொன்றதாகப் படித்த நினைவு. அதற்கு என்ன தண்டனை பெற்றார் என்று தெரியவில்லை!

ஜோத்பூர் நீதிபதியின் பார்வையில் மானின் உயிர் அரியதாகத் தெரிந்துள்ளது. ஒருசில மான்களைக் கொன்றதற்கே ஐந்து வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கும் நமது குற்றவியல் சட்டங்கள், குஜராத்திலும் மும்பையிலும் ஆயிரக்கணக்கான மனித உயிர்களைக் கொன்ற மாபாதகர்களுக்கும் கடும்தண்டனை வழங்கும் என்று நம்புவோமாக!

பயங்கர ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருந்ததாகவும் மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டக் குற்றவாளிகளுக்கு உதவியதாகவும், வழக்கிற்கான ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் சஞ்சய்தத் என்ற இந்தி சினிமா நடிகருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு அவரும் வீட்டுக்குப் போய் விட்டார்!

வீட்டுக்கு வீடு சூலம் வழங்கியும்,வாள், வேல், அம்பு மற்றும் துப்பாக்கிகளை வைத்து 'ஸாகா' எனும் பயங்கர ஆயுதப்பயிற்சியை பள்ளி மைதானங்களில் தீவிரவாத சங்பரிவாரத் தொ(கு)ண்டர்களுக்கு பகிரங்கமாக வழங்கி வருவது சட்டத்தின் பார்வையில் குற்றமாகப் படவில்லையா?

ஊடகங்களால் பரபரப்பாகப் பேசப்பட்டக் குற்றவாளிகள் பிரபலங்களாக இருப்பதனால், தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தண்டனைகளிலிருந்து தப்பி விடுகிறார்கள்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பற்றியே ஊடகங்கள் முன்னிலைப் படுத்திக் கொண்டிருந்தன. இந்த சைக்கில் கேப்பில் ஜீவஜோதியின் கணவர் கொல்லப்பட்ட வழக்கிலிருந்து, போதுமான ஆதாரங்கள் இல்லாததனால் சரவணபவன் ராஜகோபால் விடுவிக்கப்பட்டார்!

ஜார்கண்ட் முக்தி மோட்சா கட்சியின் தலைவர் சிபுசோரனின் உதவியாளர் கடத்திக் கொல்லப்பட்ட வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்பட்டு, ஜார்கண்ட் விரைவு நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சிபுசோரன், அதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்து க்டந்த 22 ஆகஸ்ட் 2007 இல் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப் பட்டிருக்கிறார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி "பிரேதப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது கொலை செய்யப்பட்ட சிபுசோரனின் உதவியாளரின் உடல்தான் என்பதை அரசுத் தரப்பு சரிவர நிரூபிக்கவில்லை" என்பதைக் காரணமாகச் சொல்லி விடுவித்திருக்கிறார்! ("கொலை செய்யப்பட்டுச் செத்துப் போனவன் என் மகனே அல்ல" என்று ஒரு தந்தை எழுதிக் கொடுத்த நிகழ்வு இங்கு உங்களுக்கு நினைவுக்கு வந்து தொலைத்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல:-).

குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத வழக்குகளில் "காற்றைக் கைது செய்" (Arrest the wind) என்ற வேடிக்கையான குறிப்புடன் வழக்கு முடிவுக்குக் கொண்டு வரப்படும்! சிபுசோரன் மற்றும் ராஜகோபால் வழக்கில் 'காற்றைக் கைது' செய்தார்களா? என்று தெரியவில்லை!

சங்கரராமன் கொலை வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக இருந்து கொண்டே பகுதிநேரத்தொழிலாக அருளாசி வழங்கிக் கொண்டிருக்கும் காஞ்சி மடாதிபதி சங்கராச்சாரியாரையும் விடுவித்து விட்டால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று வழக்கம் போல் சொல்லிக் கொள்ளலாம்.

"சங்கராச்சாரியாரின் பக்தன் என்பதால் தன்னால் அவர் மீதான வழக்கை விசாரிக்க மனம் ஒப்பவில்லை" என்று 'மக்கள்மன்ற அவமதிப்பு' செய்தார் உச்ச நீதிமன்றநீதிபதி ஒருவர்.

முன்னாள் நடிகையும் முதல்வருமான ஜெயலலிதாவின் ரசிகர் யாராவது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து தொலைத்து விட்டால் ஜெ.யும் அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுவிக்கப்படலாம்.

அதேபோல், "சஞ்சய் தத்தின் பரமரசிகன் என்பதால் அவரை விசாரிக்க முடியாது" என்றும்,"சரவணபவனில் விற்கப்படும் 14 இட்லிகளை விரும்பிச் சாப்பிட்ட விசுவாசத்தினால் ராஜகோபாலைத் தண்டிக்க மனம் ஒப்ப வில்லை" என்றும் அந்தந்த நீதிபதிகள் சொல்லாததை, 'விடுபட்டவை ' லிஸ்டில் நாம் சேர்த்து விடத்தான் வேண்டும்.

Labels:

Monday, August 27, 2007

ஹைதராபாத் குண்டு வெடிப்பு

நேற்று முன்தினம் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பில் வழக்கம் போல் ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரிலுள்ள தீவிரவாத அமைப்பைச் சொல்லி வழக்கம்போல் விசாரனை முஸ்லிம்களைச் சுற்றியே இருக்கப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை!ஒவ்வொரு குண்டு வெடிப்பிற்கும் பின்னணியில் பயங்கர சதித்திட்டங்கள் உள்ளன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்படுகிறதோ, அதற்கு முன்/பின் ஏதேனும் பரபரப்பான விசயம் இருக்கிறது என்பதைப் பலரும் கவனித்திருக்கலாம்.

அமெரிக்க-இந்திய அணுசக்தி உடன்பாட்டினால் காங்கிரஸின் குடுமி, இடதுசாரிகளின் பிடியில் அகப்பட்டுக் கொண்டுள்ளது. "என்ன பந்தயம்? தற்கொலை பண்ணிக் கொண்டு முதலில் நான்தான் சாவேன்" என்பதுபோல் உள்ளது ஆளும் மன்மோகன் அரசின் அமெரிக்க அடிமைத்தன உடன்படிக்கை! ஆகவேதான் காங்கிரஸ் தவிர்த்த அரசியல் கட்சிகள் அமெரிக்காவின் 123 ஒப்பந்தத்தை எதிர்க்கின்றனர்.

123 ஒப்பந்தத்தினால் இந்தியாவிற்குக் கிடைக்கும் நலன்களைவிடப் பன்மடங்கு நலன் ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு பைப்லைன் மூலம் எரிவாயுவைக் கொண்டுவரும் திட்டம் இருந்தது. ( மேலும், 123 ஒப்பந்ததை விட ஐந்து மடங்கு குறைவான செலவில், முப்பது மடங்கு பலன் கிடைக்க வாய்ப்பிருந்ததாக பொருளியல் வல்லுனர்கள் அவதானித்தார்கள். இஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய அப்போதைய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர ஐயர், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா அலட்சியபடுத்தி இத்திட்டத்தில் இறங்கும் என்று கூறினார். அமெரிக்காவின் தந்திரத்தாலும் காங்கிரஸின் அமெரிக்க எஜமான விசுவாசத்தாலும் பைப்லைன் ப்ராஜெக்ட் ஏறத்தாழக் குப்பைக் கூடைக்கு அனுப்பப்பட்டு விட்டது!

ஒன்றுக்கும் உபயோகமற்ற இராமர் பாலத்தை வைத்து மதவாத அரசியல் செய்து, எஞ்சியிருக்கும் சொற்ப காலத்தை ஓட்டலாம் என்றிருந்த பா.ஜ.க வுக்கு, திருப்பதி பஞ்சாமிர்தம் கிடைத்ததுபோல் அமெரிக்காவின் 123 ஒப்பந்தம் கிடைத்துள்ளது. முடங்கிக் கிடந்த பா .ஜ.க பெருந்தலைகள் சற்று உற்சாகம் பெற்றிருப்பதை அரசியல் வட்டாரத்தில் காண முடிகிறது.

இந்தச்சூழலில்தான் ஹைதராபாதில் நடந்த குண்டு வெடிப்பிற்கு ஹர்கத் உல் ஜிகாதி என்ற பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆதரவு பெற்ற தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் என்று ஒருசில மணித்துளிகளுக்குள் முதல் கட்ட புலணாய்வுத் தகவல்கள் கசியத் தொடங்கி விட்டன .

சம்பவ இடத்தைப் பார்வையிட்ட வெங்கையா நாயுடு, உள்நாட்டுப் பாதுகாப்பு விசயத்தில் மெத்தனமாக இருக்கும் காங்கிரஸைச் சாடினார். திருவாளர் அத்வானி , "மீண்டும் பொடா சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்" என்று திருவாய் மலர்ந்தார்! குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி திருப்பதி , காளஹஸ்தி கோவில்களுக்கு வரலாறு காணாத பாதுகாப்புப் போடப்பட்டு உள்ளதாகவும் தமிழகத்திலும் கோவில்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டு பஸ், இரயில் பேரூந்து பயணிகள் மிகுந்த சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுவதாகவும் தலைப்புச் செய்திகளில் சொன்னதோடு , சுமார் 700 பேரை சந்தேகத்தில் கைது செய்திருப்பதாகவும் சொன்னார்கள்.

இனி ஓரிரு வாரங்களுக்குத் தீவிரவாதிகளை 'வலைவீசி'த் தேடும்பணி முடுக்கி விடப்படும். தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட /படாதவர்கள் விசாரணை வளையத்தில் கொண்டு வரப்படுவார்கள்.

சரி, இந்த குண்டு வெடிப்பை யார்தான் செய்திருப்பார்கள்? வழக்கம்போல் முஸ்லிம்கள்மீது பழியைப் போட்டு அடையாளமாக ஒருநாள் பந்த் அல்லது இறந்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை என்று அறிவித்து விட்டால் எல்லாம் சரியாகி விடுமா ?

முந்தைய குண்டு வெடிப்புகள் ஏதேனும் விசேஷ தினங்களில்தான் நடத்தப் பட்டன. மும்பை ரயில் குண்டு வெடிப்புகள் தீபாவளியன்றும், மாலேகான் குண்டு வெடிப்புகள் முஸ்லிம்களின் ஷபே பராஅத் இரவன்றும் நேற்றைய குண்டு வெடிப்பு ஓணம் திருநாளின் போதும் நடந்துள்ளதை கவனத்தில் கொண்டால் குண்டு வெடிப்புகளினால் பொதுமக்களை அச்சுறுத்திப் பலன் பெறும் நோக்கம்தான் தெரிகிறது. அரசுக்கு எதிராகச் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் பொதுமக்களைப் பகைத்துக் கொள்ளும் இத்தகைய நிகழ்வுகளைச் செய்வார்களா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .

ஆந்திராவில் இந்தகைய குண்டு வெடிப்புகளை வழக்கமாக நடத்தி வரும் நக்ஸலைட்டுகளைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாயில் நுழையாத ஹர்கத் உல் ஜிகாதி என்ற அமைப்புதான் காரணம் என்றச் செய்தியைக் கசிய விட்டது முஸ்லிம்களை மீண்டும் தனிமைப் படுத்தும் நோக்கம் என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. இன்னொரு பக்கம், காங்கிரஸின் மீதான அமெரிக்க ஆதரவு இமேஜை திசை திருப்பும் அவசியம் மற்றும் அரசியல் அநாதைகளுக்குப் பிழைப்பு நடத்த , வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாகவும் இந்தக் குண்டு வெடிப்பு அமைந்துள்ளது.

உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு, அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

Labels:

Wednesday, August 22, 2007

இமாம்கள் - "பேரைச் சொன்னாலே அதிருதுல’’

இமாம் பசந்த் கேள்விப்பட்டிருப்பீர்கள்! நம்நாட்டு மாம்பழ வகைகளுள் ஒன்றின் பெயர்! அதுவன்றி தற்போதெல்லாம் 'இமாம்' என்ற பெயரைக் கேட்டாலே சிலருக்குக் கசக்கிறது! குறிப்பாக கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகக் கருத்து சொல்லும் கசப்பான இமாம்கள் பற்றி தெளிவு படுத்தும் முயற்சி !

இமாம் கோமேனி:

சல்மான் ருஷ்டி என்ற நரகல் எழுத்தாளன் முஹம்மது நபியைத் தூற்றி எழுதியதல் ருஷ்டிக்கு மரணதண்டனை ஃபத்வா கொடுத்தார். அதனால், கருத்துரிமைக்கு எதிராகக் கருத்துச் சொன்னதற்காக, அமெரிக்கா,ஐரோப்பா மற்றும் பல கருத்துரிமையின் சொந்தக்காரர்களுக்கு கசப்பான இமாம் ஆனார்.

டெல்லி ஷாஹி இமாம்:

அவ்வப்போது இஸ்லாத்தை இந்திய அரசியலுக்குள் குழப்பி கருத்துச் சொல்லிவரும் இவர் எமர்ஜென்ஸியின்போது நிழல் பிரதமராக இருந்த சஞ்சய் காந்தி நடத்திய ஜுமா மசூதித் துப்பாக்கிச் சூட்டால் காங்கிரஸுக்கு எதிரியானார். பா.ஜ.கவுக்கு ஓட்டுப் போடச் சொன்னார். இப்போது பா.ஜ.க மற்றும் சங்பரிவாரங்களுக்குக் கசப்பான இமாம்! மும்பையின் பால் தாக்கரேயைக் குறை சொன்னால் பதிலுக்கு இவரை ஒப்பிட்டு விமர்சிக்க மட்டுமே உதவும் ஆபத்பாந்தவமான இமாம் !

இமாம் அலி:

சேத்துப்பட்டு ஆர்.எஸ்.எஸ் அலுவலகத் தாக்குதல் வழக்கில் தேடப்பட்டு, என்கவுண்டர் கொலை செய்யப்பட்ட இமாம் அலிக்கு அவருடைய பெயர் போலீஸுக்குக் கசப்பானது!

ஆக, உலக அளவிலும், இந்திய அளவிலும் தமிழக அளவிலும் பூச்சாண்டி காட்ட, பெயரில் மட்டும் இமாமைக் கொண்ட மேற்கண்ட மூன்று இமாம்கள் போதும். இவர்களன்றி, சானியா மிர்ஸா முதல் தஸ்லிமா மீதுவரை அவ்வப்போது 'ஃபத்வா' கொடுக்கும் திடீர் இமாம்களும் சமீபகாலங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறார்கள்!

யார் இந்த இமாம்கள்? உண்மையில் இமாம்களுக்கு இஸ்லாத்தில் உள்ள முக்கியத்துவம், அவர்களின் அதிகாரங்கள் யாவை? அதிகார வரம்பெல்லை எவை என்ற தகவல்களை அறிந்து கொண்டால், இமாம்கள் மீதான அச்சம்?! நீங்கும் என்ற நோக்கில் எனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

தஸ்லிமா நசுரின் விவகாரத்தில், ஒருசில திடீர் இமாம்களின் பத்வாக்களை பிரதானப்படுத்தி இஸ்லாத்தை வசைபாடும் கருத்துச் சுதந்திரவாதிகளின் எதிர்பார்ப்பு என்னவென்றால், தஸ்லீமா நசுரினின் கருத்துக்கு எதிராக இமாம்கள் ஃபத்வா கொடுக்கக்கூடாதாம்!

யாராவது உங்கள் தாயைப் பற்றி தவறான கருத்துச் சொன்னால், பதிலுக்கு நீங்களும் எதிர்கருத்து மட்டுமே சொல்ல வேண்டுமாம்! மாற்றமாக நடந்து கொண்டால் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவராம் ! அதாவது கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டுமாம்! என்னே ஒரு நியாயம்! என்னே ஒரு எதிர்பார்ப்பு!

(தஸ்லீமா நசுரீனும் சல்மான் ருஷ்டியும் அப்படி என்னதான் பிரமாதமானக் கருத்தைச் சொல்லி விட்டார்களோ தெரியவில்லை! :-) ருஷ்டியின் நாவலைப் படித்தவர்களுக்குத் தெரியும் ; அவருடைய ஆங்கில(!) அறிவு.

மனம்போன போக்கில் கருத்துக்களைச் சொல்லும் ஊடகங்களைத் தங்கள் காலடியில் அடக்கி வைத்திருக்கிறோம் என்ற திமிரில்தானே இஸ்லாத்திற்கு எதிராக எதையும் சொல்லி விட்டு, கருத்துச் சுதந்திரம்/கத்தரிக்காய் சுதந்திரம் என்று கூக்குரல் இடுகிறார்கள்.

சரி விசயத்திற்குச் செல்வோம். ஓர் இஸ்லாமிய அரசில், இமாம் என்பவர் இறைபக்தியிலும் இஸ்லாமிய சட்ட திட்டங்களை நன்கு ஆராய்ந்து அறிந்த எவரும் இமாம் ஆக இருக்கலாம் .

அரேபியாவில் இஸ்லாம் பரவத் தொடங்கிய காலத்தில், அந்தந்த பகுதிக்கு அமீர் (தலைவர்) ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவரே இமாம் ஆக இருந்தனர். அவர்களின் சமூகம் விஸ்தரிக்கப்பட்டு மாநிலம்,நாடு என்று எல்லைகள் வரையறுக்கப்பட்ட காலங்களில்,இமாம்களே கலீஃபா எனும் ஜனாதிபதி ஆகவும் இருந்தனர் .

நாளடைவில் பெரும்பாலான அரபு நாடுகள் காலனியாதிக்கச் சூழ்ச்சியில் வீழ்ந்து இஸ்லாமியத் தலைமைத்துவம் சிதைக்கப்பட்ட பிறகு அந்தந்த நாட்டுத் தலைவர்கள், தங்களை ஷெய்க் என்றோ மலிக் என்றோ சுல்தான் என்றோ அழைத்துக் கொண்டனர் . இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள், தங்கள் பொறுப்பிலிருந்து விலகி ஆடம்பரச் சுகபோகத்தில் வீழ்ந்த பிறகு, இமாம்களாக இருந்து மக்களை வழிநடத்த வேண்டியவர்கள் இமாம்களுக்கான இஸ்லாமிய இலக்கணத்திலிருந்து விலகினர் .

இன்னொருபக்கம், முஹம்மது நபியின் மறைவுக்குப் பின்னர் அரசியல் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. நபித்தோழர்களில் சிலருக்குள் எழுந்த கருத்து மோதல்கள் அதிகார மோதல்களாக உருமாறி இஸ்லாத்தின் வளர்ச்சியில் பின்னடைவுகள் ஏற்பட்டன .

இச்சூழலில் நபிகளாரின் பெயரில் இஸ்லாமிய எதிரிகள் தங்கள் சொந்தக் கருத்துக்களைப் பரப்பி இஸ்லாத்தின் அடிப்படை விசயங்களில் குழப்பம் விளைவிக்க முயன்றனர்.

ஒருபக்கம் வழிநடத்த வேண்டிய ஆட்சியாளர்களின் அதிகாரப்போட்டி, இன்னொரு பக்கம் இஸ்லாமிய எதிரிகளின் நயவஞ்சகச் சூழ்ச்சியினால் முஸ்லிம்களிடம் நிலவிய உண்மையான இஸ்லாம் பற்றிய குழப்பங்கள். இவற்றிலிருந்து எதிர்கால முஸ்லிம்களை தெளிவுபடுத்தும் ஒரேவழி திருக்குர்ஆனுக்கு முரணின்றி நபிகளாரின் வழிகாட்டல்களை ஆதாரமாகக் கொண்டு ஹதீஸ்களைத் தொகுக்க வேண்டிய பொறுப்பை முன்வந்து ஏற்று ஹதீஸ்களை தொகுத்தவர்களுள் நான்கு இமாம்கள் பரவலாக அறியப்படுகிறார்கள் .

இந்நான்கு இமாம்கள் தொகுத்த ஹதீஸ்களுடன் வழிகாட்டல்களை ஏற்று அவர்களைப் பின்பற்றிய முஸ்லிம்கள் அந்தந்த இமாம்களின் பெயரால் தனித்தனி மத்ஹப் எனும் சட்டப் பிரிவுகளை உருவாக்கிக் கொண்டனர் .

(மத்ஹப்களைப் பின்பற்றிய பிற்கால முஸ்லிம்களில் சிலர் இமாம்கள் மூலமாகக் கொண்ட குர்ஆனையும் ஹதீஸையும் முன்னிறுத்தாமல், இமாம்களின் புரிந்து கொள்ளல்களுடன் கூடிய விளக்கக் குறிப்புகள் அடங்கிய மத்ஹப்களை முன்னிறுத்தியதைத் தற்கால அறிஞர்கள் சிலர் எதிர்த்தும் ஏற்றும் வருகிறார்கள் என்பது வேறு விசயம்.)

ஆக, இமாம் என்பவர் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை எடுத்துரைக்கும் அனைத்து முஸ்லிம்களாலும் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மார்க்க அறிஞரே. அந்த வகையில்தான் இஸ்லாத்தைப் புரிந்து கொண்ட ஆனால் இஸ்லாம் ஆட்சி நடக்காத நாட்டிலிருக்கிறோம் என்பதை மறந்து உணர்ச்சிப் பெருக்கில் ஃபத்வாக்களை வழங்கி இஸ்லாமிய எதிர்ப்புவாதிகளுக்குத் தீனி போடுகிறார்கள்.

இஸ்லாமியச் சட்டமோ ஆட்சியோ நடைமுறையில் இல்லாத நிலையில் மாற்றாரை அதிர வைக்கும் ஃபத்வாக்களால் இஸ்லாமிய எதிர்ப்புவாதம் வலுப்பெறுமே தவிர, இஸ்லாத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை ஃபத்வா வழங்கும் இமாம்கள் உணர வேண்டும் . நடைமுறைச் சாத்தியமில்லாத வெற்று ஃபத்வாக்களால் எந்த பிரயோஜனமும் இல்லை.

அனைத்து முஸ்லிம்களையும் கட்டுப்படுத்தும் இமாம் என்று ஒருவரும் தற்போது இல்லை! இஸ்லாமிய ஆட்சி நடைமுறையில் உள்ளதாகச் சொல்லப்படும் ஈரான் தவிர, எங்கும் ஃபத்வாக்கள் செயல்படுத்தப் படுவதில்லை! ஆகவே, இனியும் ஊடகங்கள் அலறியடித்துக் கொண்டு பிரதானப்படுத்தும் இமாம்களைக் கண்டு யாரும் அதிர வேண்டாம்!

Labels: ,

Tuesday, August 14, 2007

இறைநம்பிக்கை அறிவுப்பூர்வமானதா?

மனித இனம் தோன்றியது முதல் பெரும்பாலான மனிதர்களிடம் அனேகமாக எழுந்திருக்கும் சந்தேகம் 'கடவுள் உண்டா?'' என்பதேயாகும்! வாழ்க்கை சுமூகமாகச் சென்று கொண்டிருக்கும்வரை கடவுளைப் பற்றியக் கேள்வி எழுந்திருக்காது! அனேகமாக மனித சக்திக்கு மீறிய நிகழ்வுகளின் போதுதான், தனக்கு மிஞ்சிய சக்தி பற்றிய ஐயம் எழுந்திருக்கவேண்டும்.

பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இதனை "இயற்கையின் நிகழ்தகவு" என்றும் அறிவியலாளர்கள் "வினை அல்லது எதிர்வினை" என்றும் இறை நம்பிக்கையாளார்கள் "எல்லாம் அவன் செயல்" என்றும் சொல்லி தற்காலிகமாகச் சமாதானம் அடைகின்றார்கள். இதில் யார் சொல்வது சரியான சமாதானமாக இருக்கும்?

பகுத்தறிவாளர்களும், அறிவியலாளர்களும் பெரும்பாலான சமயங்களில் ஒத்துப் போய்விடுகின்றனர்; ஆனால் இறை/மதநம்பிக்கையாளர்களில் மட்டுமே முரண்படுகின்றனர். முற்பிறவியின் பலனே இவ்வுலக வாழ்வின் இன்பமும் துன்பமும் என்பது இந்துமத நம்பிக்கை; இவ்வுலகில் செய்யும் கருமங்களுக்கு இறப்பிற்குப்பின் மறு உலகில் பலன் கொடுக்கப்படும் என்பது கிறிஸ்தவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளாகும். இதில் எந்த நம்பிக்கை சரியாக இருக்கும்?

இவ்வுலகில் துன்பப்படும் ஒருவனிடம், முற்பிறவியில் செய்த வினைகளுக்கான பலனே உன் துன்பம் என்று சொன்னால், சாதாரண மனிதமனம் சமாதானம் அடையுமா? முந்தைய பிறவியில் என்ன செய்தோம் என்றே அறிந்திராமல் அல்லது அறிய வாய்ப்புக் கொடுக்கப்படாமல் தண்டிக்கப்படுவது என்ன நியாயம்? அவ்வாறு தன்னை தண்டிக்கும் கடவுளை, பகுத்தறிவுள்ள மனித மனம் ஏற்க மறுப்பது நியாயமே! ஆக, முற்பிறவிக் கருமவினைகள் ஏற்க முடியாதவை மட்டுமின்றி எவ்வித ஆதாரமுமற்ற நம்பிக்கை என்ற முடிவுக்கு வருவது எளிது.

இப்பிறவியில் செய்யும் கருமங்களுகான பலன்கள், மறுபிறவியில் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கை அறிவுப்பூர்வமானதா என்ற ஆய்வுக்குச் செல்லும் முன், எல்லா நிகழ்வுகளுமே இயற்கையின் நிகழ்தகவு என்று நம்பும் கடவுள் மறுப்புக் கொள்கை பற்றியும், ஒவ்வொரு நிகழ்வும் வினை அல்லது அல்லது எதிர்வினை என்று வாதிடும் அறிவியல் நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகும்.

'எல்லா நிகழ்வுகளுமே இயற்கையின் நிகழ்தகவு' என்றால் ஏன் சிலர் ஏழையாகவே பிறந்து ஏழையாகவே மரணிக்க வேண்டும்? மற்றவர்களைப்போல் ஓரளவு துன்பமின்றி வாழ்ந்து மரணிக்க, இயற்கை ஏன் வாய்ப்பு வழங்கவில்லை? எயிட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தையும் எயிட்ஸ் நோய்க்கு இரையாக வேண்டும் என்ற இயற்கையின் கொடிய தண்டனை ஏன்? எல்லாமே இயற்கையின் நிகழ்தகவு என்றால் இயற்கைக்கு முரணான தலை ஒட்டிப் பிறக்கும் குழந்தைகள், ஊனம், ஹார்மோன் குறைபாடுகளுடன் கூடிய மனிதப் படைப்புகள் ஏன்? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் கடமை இயற்கையின் மீது பழி போடும் நம்பிக்கையாளர்களுக்கு உண்டு.

இதே கேள்விகள் அறிவியலாளர்களுக்கும் பொருந்தும். ஒருவன் துன்பப் படுவது வினையா? எதிர்வினையா? பிறருக்குத் தீமைகள் செய்யும் ஒருவன் இன்பமாகவும், நன்மைகள் செய்யும் ஒருவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருப்பது ஏன்? 'வினை விதைத்தவன் வினையறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான்' எனும்போது முரண்பட்ட எதிர்வினைகள் சாத்தியமானது எப்படி?

இயற்கையின் நிகழ்தகவு, வினை அல்லது எதிர்வினை என்ற அறிவியல் அல்லது பகுத்தறிவுக் காரணங்களைச் சொல்லி இறைமறுப்பை நியாயப்படுத்த முடியாது! இறுதியாக, இறைநம்பிக்கை கொண்டவர்களுக்கு இறையின் இருப்பை நிரூபிக்கும் கடமை எழுகிறது!

இறைவன் இருக்கிறான் என்று ஒப்புக் கொள்ளும் எல்லா மதங்களுமே இறைவனை மாட்சிமை பொருந்திய சக்தியாகச் சித்தரிக்கின்றன. வல்லமை மிக்க இறைவன் தவறு செய்பவர்களைத் தண்டிப்பான் என்ற நம்பிக்கையே, மதநம்பிக்கையாளர்களை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது.

மேலும், இறைவனின் கட்டளைகளை எடுத்துச் சொல்லும் இறைத்தூதர்களும் உண்டு. மிகப்பெரிய மற்றும் பண்டைய மதங்களான இந்து, யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களில் இறுதியாக இஸ்லாத்தில் மட்டுமே இறைத்தூதர் வாழ்ந்திருக்கிறார். முஹம்மது நபிக்குப் பிறகு இறைத்தூதர் என்று எவரும் அறியப்படவில்லை. இனி புதிய வேதமோ அல்லது இறைத்தூதரோ அனுப்பப்படமாட்டார்கள் என்று இஸ்லாம் தெளிவு படுத்தப்பட்டு விட்டதால், முஸ்லிம்களுக்கு மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது!

அவ்வாறு சொல்லப்படாத பிறமதங்களிலிருந்து நமக்குத் தெரிந்த காலத்தில் தூதர்களோ அல்லது வேதமோ வரவில்லை? பாவங்களும் கொடுமைகளும் மிகைக்கும்போது அவதாரமெடுத்து மனித குலத்தைக் காத்த கடவுளர்களுக்கு என்னவாயிற்று? நமக்குத் தெரிந்து கண்முன் நடந்த எத்தனையோ அக்கிரமங்களில் அப்பாவிகள் இறந்துள்ளனர். அநியாயம் நடக்கும்போது அவதாரமெடுத்து நம்மைக் காப்பார் என்று நம்பி பூஜிக்கப்பட்ட எந்தக்கடவுளும் ஏன் அவதாரமெடுத்து அவர்களைக் காக்கவில்லை? எனில், அத்தகைய கடவுளர்கள் மிகைப்படுத்தப்பட்ட அவதாரங்கள் தானே?

ஆக, கடவுள் என்ற சக்தி மனிதர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விடையாக, தெளிவான வழிகாட்டியாக இருக்க வேண்டும். அத்தகையக் கடவுளை எந்தமதம் போதிக்கிறதோ, அவனே சிறந்த கடவுள்! அதுவே சிறந்த மதம்!

சத்தியமார்க்கம்.காமில் எழுதியது. மீள்பிரசுரம் செய்துள்ளேன்.

Labels:

Monday, August 13, 2007

கரு(ப்பைச்)த்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து!

ஹைதராபத்தில் தஸ்லீமா நசுரீன் தாக்கப்பட்டதும் கருத்துச் சுதந்திரம், கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் சிலர் லெக்சர் கொடுக்கிறார்கள். குறிப்பாக பா.ஜ.க. வின் மல்ஹோத்ரா முதல் கீழ்மட்ட பரிவாரங்கள்வரை குதிக்கிறார்கள். உண்மையான கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான இவர்கள், கொஞ்சம் கூட 'லஜ்ஜை'யின்றித் தற்போது கருத்துச் சுதந்திரம் பற்றி பேசுகிறார்கள்!


தஸ்லீமா தாக்கப்பட்டுது குறித்து பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் வி.கே. மல்கோத்ரா கூறுகையில், " எழுத்தாளர் தஸ்லிமா நசுரீன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. தாக்குதல் நடத்தியவர்கள் ஆந்திராவில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ளனர். குஜராத் இனக் கலவரம் தொடர்பாக குரல் எழுப்பிய மதச்சார்பற்ற கட்சியினர், தஸ்லிமா மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது வேடிக்கையாக உள்ளது'' என்றார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா கூறுகையில், "தஸ்லிமாவைக் கொலை செய்வேன் என பகிரங்கமாக மிரட்டிய எம்.ஐ.எம். கட்சியின் சட்டசபை தலைவர் அக்பருதின் ஓவைசி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.

கூடுதலாக, ஆர்.எஸ்.எஸ் . அமைப்பின் பத்திரிக்கையான "பாஞ்சஜன்யா'வின் ஆசிரியர் தருண் விஜய் கூறுகையில்,"வங்க தேசத்தில்சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக தஸ்லிமா நசுரீன் குரல் கொடுத்து வந்தார். இதனால்தான் முஸ்லிம் பழமைவாதிகளின் கோபத்துக்கு அவர் ஆளானார்" என்று ஜோக் அடித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் எதையும், கருத்துச்சுதந்திரம் என்று வாய்கிழிய முழங்கும் இவர்கள் மறுக்கும் கருத்துச் சுதந்திரங்களின் பட்டியலைப் பார்ப்போம்:

கருத்துச் சுதந்திரம் # 1

கிரஹாம் ஸ்டையின்ஸ் என்ற கிறிஸ்தவர், ஒரிசா தொழுநோயாளிகளுக்கு பணிவிடைச் செய்ததோடு பைபிள் கருத்துக்களையும் சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்து வந்தார்.கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி தூக்கும் உணர்ச்சி வசப்பட்ட சங்பரிவாரங்களால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார் !

கருத்துச் சுதந்திரம் # 2

ஓவியர் M.F.ஹுசைன் இந்துக்கள் பெண்கடவுளாகக் கருதும் சரஸ்வதியைச் சுதந்திரத்துடன் நிர்வாணமாகச் சித்திரம் வரைந்ததால், அவருடைய அலுவகம் தாக்கப் பட்டது!

கருத்துச் சுதந்திரம் # 3

காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி Let's Kill Gandhi என்ற நூலில், பிராமனர்களே காந்தியின் படுகொலைக்குக் காரணம் என்ற உண்மையைச் சுதந்திரமாக எழுதினார். இதுவும் சிலருக்கு மனதைப் புண்படுத்தியதாம்! அதனால் மிரட்டப்பட்டு பின்னர் "நான் எல்லா பிராமனர்களையும் சொல்லவில்லை" என்று சொல்ல வைக்கப்பட்டார் .

கருத்துச் சுதந்திரம் # 4

இன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி, "இந்து என்றால் திருடன்" என்று சொன்னார். அது அவரின் சொந்தக் கருத்தல்ல; ஏற்கனவே எழுதப்பட்டிருந்த இந்தி அகராதியின் மொழிபெயர்ப்பைச் சுதந்திரமாகச் சொன்னார். இதுவும் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகச் சொல்லி இந்து முன்னணியின் வற்புறுத்தலால் அன்றைய ஜெயலலிதா அரசு வழக்குத் தொடர்ந்தது.

கருத்துச் சுதந்திரம் # 5

பெரியார் ஈ.வெ.ராமசாமி இந்து மதத்தின் மூடநம்பிக்கைகளைச் சுதந்திரமாக விமர்சித்ததால் அவர்மீது செருப்பை எறிந்தனர். ஸ்ரீரங்கம் கோவிலின் எதிரே பெரியாருக்குச் சிலை வைக்கக்கூடாது எனும் அளவுக்கு, பெரியாரின் சுதந்திரமான கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றும் இருக்கிறார்கள்!

தஸ்லீமாவுக்கு அடைக்கலம் தந்த நாட்டில், மற்றவர்களின் உணர்வுகளைத் தாக்கி எழுதுவது நியாயம் என்றால், அவரால் பாதிக்கப்பட்டவர்களால் அவர் தாக்கப்பட்டதும் நியாயமே!

இந்து மதத்திற்கு எதிராக எவராவது கருத்துச் சொன்னால் Insulting Religious Sentiments என்று சொல்லப்படும்போது, அதே காரணம் இஸ்லாத்தைப் பற்றித் தரக்குறைவாகச் சொல்லப்படும்போது பொருந்தாமல் போய்விடாது!

உயிருக்குப் பாதுகாப்பு வேண்டித் தஞ்சம் புகுந்த இடத்திலும், இஸ்லாத்துடன் விளையாடும் தஸ்லீமாவால் நம்நாட்டின் மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் உள்ளதைக் கருத்தில் கொண்டு, மத்திய அரசு அவரைத் திருப்பியனுப்புவதே நம் நாட்டுக்கு மட்டுமின்றி, தஸ்லீமாவுக்கே நல்லது!

Labels:

Tuesday, August 07, 2007

நோ கமெண்ட்ஸ் ப்ளீஸ் - 2

நான் ஜெயேந்திரரின் பக்தன். எனவே புதுச்சேரி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சங்கரராமன் கொலை வழக்கு விசாரணையில், தமிழக அரசு வக்கீல்கள் வாதாடக் கூடாது என்று கோரி ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி பாலசுப்ரமணியம் கூறி விட்டார்.


இதையடுத்து இந்த வழக்கு வேறு பெஞ்சுக்கு மாற்றப்படவுள்ளது. சங்கரராமன் கொலை வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. இதற்கு, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும், தமிழக அரசு வக்கீல்கள் ஆஜராகக் கூடாது என்று கோரி இரு சங்கராச்சாரியார்கள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மனுதான் காரணம்.


இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், புதுச்சேரி நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது. இதனால் இந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.


இந் நிலையில், நேற்று சங்கராச்சாரியார்கள் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஜி.பி.மாத்தூர், பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பாலசுப்ரமணியன் கூறுகையில், நான் சங்கராச்சாரியாரின் பக்தன்.


எனவே என்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது. இம்மனுவை நான் விசாரிக்க மாட்டேன். 3 வாரங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைக்கிறேன். வேறு பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கும் என்றார். இதையடுத்து இந்த வழக்கு 3 வாரங்களுக்குத் தள்ளி வைக்கப்பட்டது.


Labels: ,

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker