Sunday, October 28, 2007

நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#

இலங்கை ராணுவத்திற்குப் பாரிய சேதங்களை விளைவித்த விடுதலைப் புலிகளின் அனுராதபுரம் விமானத்தாக்குதலைத் தொடர்ந்து கடற்புலிகள் பிரிவு ஈழப் போராளிகளின் கொல்லப்பட்ட உடலை நிர்வானமாகக் காட்டிய இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தைகப் பலரும் கண்டித்துள்ளனர். எமது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம்.

"ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளல்லர்" என்று ஐக்கிய நாடுகள் சபையில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஆப்கான், இராக் மற்றும் பலஸ்தீனப் போராளிகளை "இஸ்லாமியத் தீவிரவாதிகள்" என்ற மத அடைமொழியுடனும்,இலங்கையில் போராடிவரும் விடுதலைப் புலிகளை ஈழப்போராளிகள் என்று எவ்வித அடைமொழியின்றியும் சொல்வர்.



இலங்கை ராணுவத்தின் இச்செயலைக் கண்டிக்கும் எவரும், புத்தர்களைக் கொண்ட இலங்கை ராணுவத்தினரின் மனிதாபிமானமற்ற இச்செயலை தப்பித் தவறியும் "புத்தமதத் தீவிரவாதம்" என்று குறிப்பிடாதது உலகமகா ஊடகக் கயமைத்தனம்!

"வரம்பு மீறுபவர்களுடன் அதே அளவு வரம்பு மீற அனுமதிக்கும் இஸ்லாம், போர்க்களத்தில் அப்பவிகள்,பெண்கள்,சிறார்கள் மதகுருமார்களைத் தாக்குவதை வன்மையாகக் கண்டிக்கிறது. பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே பதிவு செய்யப்பட்டு கடைபிடிக்கப்பட்ட இப்போர்நெறிமுறையை நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாகச் சொல்லிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபைக் கோமான்கள் கடந்த 20-30 வருடங்களுக்கு முன்னர்தான் இவற்றை நியாயம் என்று ஒப்புக் கொண்டனர்!முஸ்லிம்களிடமிருந்து இதுபோன்ற நெறிகளையும் நாகரிகத்தையும் காப்பி அடித்த இவர்கள்தான் இன்னொரு பக்கம் இஸ்லாத்தை பழமைவாதம் என்று கூக்குரலிடுகிறார்கள்!

போர்க்களத்தில் எதிர்த்துநிற்கும் போராளிகளிடம் மட்டுமின்றி அவர்களின் தேசத்தவர்களிடமும் "War against Terrorism" என்றபெயரில் வரம்பு மீறும் நாகரிக உலகின் நவீனபோர் அதர்மத்தை வகுத்ததோடு ஐக்கிய நாடுகள் சபையில் ஒப்புக் கொண்ட ஜெனீபா பிரகரணத்தையும் மீறிச் செயல்படுத்தி வருவதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கொஞ்சமும் குறைந்தவர்களல்லர் என்பதை ஈராக், ஆப்கன், பாலஸ்தீன நிகழ்கால அவலங்கள் உணர்த்துகின்றன.

அப்பாவிகளையும் கர்ப்பினிப் பெண்களையும், குழந்தைகள், பெரியவர்கள் என்று பாராமல் கொன்றொழித்த குஜராத் சங்பரிவார தீவிரவாதிகளையும் இத்தருணத்தில் கண்டிக்க வேண்டும். மேலும் எதிரி நாட்டு அமைச்சர்கள் தூதுவர்களையும் பிணைக்கைதிகளாகச் சிறைப்பிடித்து குவாண்டனாமோ, அபுகிரைப் கொடுஞ்சிறையிலடைத்து தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் உலகமகாத் தீவிரவாதம் செய்து வரும் அமெரிக்காவையும் கண்டிக்காமல் இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தை மட்டும் கண்டிப்பது பாரபட்சம்!

இன்னொரு பக்கம், விடுதலைப்புலிகளும் வரம்பு மீறாதவர்கள் அல்ல என்று சொல்வதற்கில்லை. இலங்கை ராணுவத்திற்கு உதவினார்கள் என்ற குற்றம் சுமத்தி காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற அண்டைவீட்டு தமிழின (அ)நியாயவான்கள்தான் என்பதையும் இத்தருணத்தில் பதிவு செய்கிறோம்.



இருந்தாலும், மனிதன் அவன் எதிரியே ஆனாலும் அவன் உயிருடன் இருக்கும்போதோ அல்லது மரணித்துவிட்ட நிலையிலோ கேவலப் படுத்தப்படுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. இலங்கை இராணுவத்தின் இச்செயலை மனிதம் விரும்பும் எவரும் கண்டிக்கவே செய்வர்; எமது கண்டனத்தை மீண்டுமொருமுறை பதிவு செய்கிறேன்.

Labels:

Monday, October 01, 2007

ராமர் பெயரால் ஒரு தேசத்துரோகம்...

சங் பரிவாரங்களின் அகராதியில் சில வார்த்தைகளுக்கு என்றைக்குமே நேரதிர் அர்த்தம் தான் போலும்!

சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்க, ராமர் பாலம் என்ற இல்லாத ஒன்றை கையிலெடுத்துக் கொண்டு சாமியாடும் பா. ஜ.கவினரின் முரண்பட்ட நிலையையும், முஸ்லிம்களுக்கு எதிராக அவர்கள் அடிக்கடி உபதேசிக்கும் 'தேசபக்தி ' மற்றும் 'கருத்துச் சுதந்திரம்' போன்ற தத்துவங்களுக்கும் சங் பரிவாரங்களுக்கும் துளியும் சம்பந்தமே இல்லை என்பதை மீண்டும் அறிந்து கொள்ள இப்பதிவு உதவலாம்.

1) தேசபக்தி

இந்தியாவின் மீது பற்றுக் கொள்வதை தங்களுக்கு மட்டுமே உரியதென மாய்மாலம் காட்டி, இந்திய முஸ்லிம்களை அவ்வப்போது " தேசவிரோதிகள்" என்று சொல்லும் 'அக்மார்க் ' தேச விரோதிகளான பா. ஜ.கவினர், சேது சமுத்திரத் திட்டத்தினால் நம்நாடு பெறவிருக்கும் பலன்களை அறிந்து கொண்டேதான் எதிர்க்கிறார்கள். ஏனெனில், வாஜ்பேயியுடைய ஆட்சிக் காலத்தில்தான் ' சேது சமுத்திரத் திட்டம்' என்ற ஒரு திட்டமே கையெழுத்தானது.

இப்போது இத்திட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம், இத்திட்டத்தைச் செயல் படுத்திவருபவர்கள் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சியினர் என்பதைத் தவிர வேறொரு காரணம் இல்லை.

மேலும், தி. மு.கவை எதிர்ப்பதையே குலத்தொழிலாகக் கொண்டுள்ள ஜெயலலிதா மற்றும் விஜயகாந்த் ஆகியோருடன் வருங்காலத்தில் தேர்தல் கூட்டணிப் பாலம் அமைக்க அடித்தளமாக (அல்லது கள்ள உறவாட ) சேதுத் திட்டத்தை முடக்குவதன் மூலம் ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறுவது பா. ஜ.கவின் தலையாய கடமையாகி விட்டது!

சேதுக்கால்வாய் திட்டத்தினால் பொருளாதார ரீதியிலும் ராணுவ ரீதியிலும் பல்வேறு பலன்கள் பலராலும் பட்டியலிடப்பட்டுள்ளன. இராணுவ ரீதியில் விரைவில் வல்லரசாகப் போகும் இந்தியாவிற்குக் கடற்படை ரீதியில் மிகவும் பயன்தரும் சேதுக்கால்வாய் திட்டத்தைத் தேசநலன் பேணும் எவருமே எதிர்க்க மாட்டார்கள். ஆனால், பாழாய்ப்போன சங் பரிவார வானரங்கள் தேச நலனாவது மண்ணாங்கட்டியாவது என்று சேதுத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.

2) கருத்துச் சுதந்திரம்

சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரின் போன்றவர்கள் இஸ்லாத்தையும் முஹம்மது நபியையும் விமர்சிப்பதை எதிர்த்து முஸ்லிம்கள் கொதிந்தெழும் போதெல்லாம், "கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து" என்று ஒப்பாரியிடும் ஊடகங்களும் அவர்களுடன் சேர்ந்து பஜனைபாடும் பரிவாரங்களும்தான் கடந்தவாரம் ராமரைப் பற்றிக் கருத்து சொன்னதற்காகத் தமிழக முதல்வர் கருணாநிதியின் நாக்கையும் தலையையும் கொய்து வந்தால் எடைக்கு எடை பொற்குவியல் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள்.

முஸ்லிம்களை மட்டுமல்ல, தங்களுக்கு எதிரான எவரும் - அவர் ஒரு மாநில முதலமைச்சராகவே இருந்தாலும் - கொல்லப்படுவர் என்பதற்கு, ராம்விலாஸ் வேதாந்தியின் வெறிப்பேச்சே சான்று. கொதிந்தெழுந்த திமுக அனுதாபிகள் பா.ஜ. க அலுவலகத்தைத் தாக்கினார்கள். இதுபற்றிக் கருத்துச் சொன்ன பா.ஜ.க தலைவர்கள், "யாரோ ஒரு வேதாந்தியின் பேச்சிற்காக எதற்கு எங்கள் மீது பாயவேண்டும்?" என்று கூக்குரலிட்டார்கள்.

தீவிரவாதச்செயலில் முஸ்லிம் பெயர்தாங்கி எவனாவது ஈடுபடும் போதெல்லாம், ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் வசைபாடும் பரிவாரங்களின் பபூன் தனத்தைப் பார்த்து நாடே சிரிக்கிறது.

பிறப்பால் முஸ்லிம்களான ருஷ்டியும் நஸ்ரினும் இஸ்லாத்திற்கு எதிராக எழுதியபோது, கருத்துச் சுதந்திரம் கத்தரிக்காய் சுதந்திரம் என்றெல்லாம் பிதறியவர்கள், பிறப்பால் இந்துவான கருணாநிதி ராமர் பற்றிக் கருத்துச் சொன்னதற்கு கோபம் கொள்வதேன்? ருஷ்டிக்கும் நஸ்ரினுக்கும் மட்டும் தான் கருத்துச் சுதந்திரமா? மாநில முதல்வரான கருணாநிதிக்கு இல்லையா?

இப்படியாக சங்பரிவாரங்களாகட்டும் அவர்களின் அரசியல் முகமூடி பா.ஜ. க ஆகட்டும் அவர்களிடம், "ராமனா? இந்தியாவா?" என்ற கேள்வியை முன்வைத்தால் ராமனுக்குத்தான் முதலிடம்; இந்திய நலன் இரண்டாம் பட்சமே என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளனர்.

கருத்துச் சுதந்திரம் , தேசபக்தி என்பதெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிராகப் பயன்படுத்த மட்டுமே என்பதற்கு சேதுக் கால்வாய் விசயத்தில் சங் பரிவாரங்களின் முரண்பட்ட நிலைகள் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

இனி சங்பரிவாரங்கள் குறிப்பாக பா.ஜ. கவினர் "தேசபக்தி , கருத்துச் சுதந்திரம்" என்று நாட்டு மக்களை ஏமாற்றி மீண்டும் ஓட்டுக்கேட்க வந்தால் ' நாக்கை' அறுக்க வேண்டும் !

Labels: ,

பார்வையாளர்கள்

    சுட்டிகள்

      சத்தியமார்க்கம்.காம்

eXTReMe Tracker